வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 5

ஸ்ரீ

VAstu

சென்னையில் இருந்து 110 km தொலைவில் திண்டிவனத்திற்கு முன் சாலையின் இடதுபக்கம் சமீபகாலத்தில் நல்ல புகழ் பெற்று வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய உணவகம் உள்ளது. அந்த உணவகத்தின் உரிமையாளர் ஓர் இளம் விதவை. அவரை நான் இன்று வரை சந்தித்ததே இல்லை. ஆனால் அவருடைய மாமியார் வீட்டிற்கு வாஸ்து பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த உடன் அந்த வீட்டிற்கு வாஸ்து பார்க்க சென்றேன்….

வீட்டை சுற்றி உள்ள பசுமையான விவசாய இடத்தில் செழிப்பான விவசாயத்தை பார்த்தபடியே  வாஸ்து பார்க்க வீட்டின் உள்ளே சென்றேன். சென்ற உடன் 90 வினாடி மட்டுமே அவ்வீட்டிற்குள் இருந்தேன்…

அதற்கு மேல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. என்னையறியாமல் மிகவும் பயந்து அந்த வீட்டைவிட்டு தெருவுக்கு ஓடி வந்து விட்டேன். என் காரோ அந்த வீட்டின் உள் நிற்கின்றது. காரில் இருக்க வேண்டிய என் ஓட்டுநரை காணவில்லை.. 5 நிமிடம் கழித்து வந்த ஓட்டுநரை மிகவும் அசிங்கமாக திட்டி வீட்டிற்குள் நிற்கும் வண்டியை மிக வேகமாக எடுத்து கொண்டு வெளியே வரச் சொன்னேன். அவரும் மிரண்டு எடுத்து வந்தார்.

எடுத்து வந்தவரிடம் ஓரிடத்தை குறிப்பிட்டு போக சொல்லிவிட்டு அதன்பிறகு  20 நிமிடங்களுக்கு என் ஓட்டுனரிடம் எதுவும் நான் பேசவில்லை. என்னை சாதாரண நிலைக்கு வரவழைத்த பின் என் ஓட்டுனரிடம் சொன்னேன். ரொம்ப கவனமாக வண்டி ஓட்டு… முடிந்தால் சென்னை போகாமல் விருத்தாச்சலத்தில் தங்கிவிட்டு போவோம். எனக்கு என்னவோ மிகப்பெரிய விபத்து நமக்காக காத்திருக்கின்றது போல் ஒரு உள்ளுணர்வு இருக்கின்றது என்று சொன்னேன்.

சொன்ன ஐந்தாவது நிமிடம் மிகப், மிகப் பெரிய சொல்வே முடியாத ஒரு பெரிய விபத்தில் மாட்டி கொண்டோம். அதிர்ஷ்டவசமாக ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் காப்பாற்றப்பட்டோம். விபத்தை பார்த்த யாராலும், ஏன் இன்றளவில் எங்களாலும் நம்ப முடியாத விஷயம் அது. என் ஓட்டுனர் மிகவும் பயந்து போய்விட்டார். எப்போதும் எத்தனை மணியானாலும் இரவோடு இரவாக என்னை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் இனிமேல் ஒரு இன்ச் கூட நான் வாகனம் ஓட்ட முடியாது என சோர்ந்து விட்டார்.

அதன் பிறகு என் நண்பர் திரு.அபுதாலிப் வாகனம் ஓட்ட ஒரு மிருகம் கூட தங்க மறுத்துவிடும் அளவிற்கு மோசமான விருத்தாசலம் விடுதி ஒன்றில் பேருக்கு தங்கினோம். நான் மட்டும் தூங்காமல் விடியலை நினைத்து கொண்டே இனம் புரியா பயத்துடன் உட்கார்ந்து கொண்டே இருந்தேன் .

நொடிகள் வருடங்களாக மாறிய உணர்வு. கஷ்டப்பட்டு காலத்தை கடத்தி சென்னை வந்து சேர்ந்த பின் என்னை வாஸ்து பார்க்க அனுப்பிய பெண்ணிடம் சொன்னேன் “அம்மா இது போன்ற நிகழ்வு எனக்கு நிகழ்ந்ததேயில்லை. எனக்கு சரியாக படவில்லை மொத்த நிகழ்வும்” என்று சொன்னபோது அவர் சொன்னார்.

அந்த வீட்டில் இருந்து சென்றபோது தான் என் தோழியின் அப்பாவும், தம்பியும் மிகப் பெரிய விபத்தில் கடலூர் அருகே இறந்து போனார்கள் என்று…. சொன்னதை கேட்டு அதிர்ந்த நான் அவரிடம் கேட்டேன் அம்மா! உங்கள் தோழிக்கு  இந்த வீட்டில் எதுவும் பங்கு உள்ளதா என்று?

அவரும் ஆமாம்! என்று பதில் சொன்னார்… பதிலை கேட்ட உடனே நான் சொன்னேன் வேண்டாம் அம்மா! அவரை கொடுக்க சொல்லி விடுங்கள் மொத்தமாக யாருக்காவது – இலவசமாக கூட…

அந்த இடம் சரியில்லை என்று…

அன்று நான் சொன்னதை கேட்டவர்கள் அதை செயல்படுத்தவில்லை…

விளைவு 100  வருடங்கள் வாழ்ந்து இருக்க வேண்டிய அவர் கணவர் 40 வருடங்களுக்கு முன்னே உயிர் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

ஏன் அந்த வீடு எனக்கு பயத்தை கொடுத்தது?

ஏன் என்னை ஓட விட்டது?

ஏன் எங்களை விபத்துக்குள் சிக்க வைத்தது?

நான் சொல்லியும் அந்த பெண்ணால் நான் சொன்னதை நடைமுறைப்படுத்த ஏன் முடியவில்லை?

ஏன் அந்த அபலைப் பெண்ணால் அவள் கணவரின்  உயிரை காப்பாற்றப்பட முடியவில்லை?

என்கின்ற கேள்விகள் அனைத்தும் இன்றும் என் வாஸ்து அனுபவத்தில் விடை தெரியா கேள்விகளாகவே இருக்கின்றன….

பின்குறிப்பு: –  என்னுடைய Facebook Friends List – ல் இன்றும் அந்தப் பெண்மணி என் friend ஆக இருக்கின்றார் என்பது உபரித் தகவல்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

10 + three =