March 16 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோஷ்டியூர்

அருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :     சவுமியநாராயணர்

தாயார்          :     திருமாமகள்

தீர்த்தம்         :     தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்

புராண பெயர்    :     திருக்கோட்டியூர்

ஊர்             :     திருக்கோஷ்டியூர்

மாவட்டம்       :     சிவகங்கை

 

ஸ்தல வரலாறு :

பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் “திருக்கோட்டியூர்’ என்றும் பெயர் பெற்றது.

 

இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, “யார்?’ என்று கேட்க, “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, “நான் செத்து வா!’ என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார்.  இந்த முறை அடியேன் ராமானுஜன், தங்கள் தாசன். என்னை ஆசிர்வதித்து மந்திர உபதேசம் அருள வேண்டும் என்று நம்பியிடம் வேண்டினார் ராமானுஜர். ராமானுஜரின் பணிவு நம்பியைக் கவர்ந்தது. அவரை தனியாக அழைத்துச்சென்ற நம்பி, இந்த எட்டெழுத்து மந்திரத்தை நீ உபதேசம் பெற்றபின் யாருக்கும் அறிவிக்கவோ, உபதேசம் செய்யவோ கூடாது. என் கட்டளையை மீறினால், நீ நரகம், செல்வாய் என்ற கண்டிப்புடன் உறுதிமொழி பெற்றபின், ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜரின் காதில் உபதேசித்தார். ராமானுஜரை ஆசிர்வதித்த நம்பி, என் கட்டளையை மீறாதே -இது வைகுண்டம் செல்ல வழிவகுக்கும் மந்திரம். மிக ரகசியமானது என்று அறிவுரை கூறி விடையளித்தார்.

நம்பியிடம் மந்திரோபதேசம் பெற்றதும், ராமானுஜர் உடலில் புதிய ஒளி தென்பட்டது. அந்த மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே வந்தவர் தன்னுடன் வந்த இரு சீடர்களைப் பார்த்து புன்னகைத்தார். எதிரே சவுமியநாராயணன் கோயில் தெரிந்தது. அங்கு சென்று கோயிலிருக்கும் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டவர், அருகே இருந்த தீர்த்தக்கிணறான சிம்மக்கிணறைக் கண்டு எட்டிப்பார்த்தார். அதிலிருந்த நீரில் மகாவிஷ்ணு காட்சி தந்தார். கைகூப்பி வணங்கினார் ராமானுஜர். உடனிருந்த சீடர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோருக்கு குருநாதரின் செயல் வியப்பைத் தந்தது.

அங்கிருந்து புறப்பட்ட ராமானுஜர் கோயில் கோபுரத்தின் மேல் ஏறி அதன் உச்சியிலிருந்து ஊர் மக்களைக்கூவி அழைத்தார். அனைவரும் அங்கே கூடினார்கள். அவர்கள் முகங்களில் ஒருவித அச்சம் தெரிந்தது. இந்த முறையும் நம்பி இவருக்கு மந்திரோபதேசம் செய்யாமல் விரட்டிவிட்டதால் விரக்தியடைந்தது, கீழே விழுந்து உயிர்விடத் துணிந்துவிட்டாரோ என்று அங்கு கூடியிருந்த மக்கள் கிசுகிசுத்தார்கள்.

 

மக்கள் கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். அன்பார்ந்த பக்தர்களே நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். என் உபதேசம் வருங்காலத்தில் நீங்கள் வைகுண்டம் செல்ல வழிவகுக்கும் என்று அறைகூவல் விடுத்தவர் ஓம் நமோ நாராயணாய என்று மூன்றுமுறை கூறினார். கோபுரத்தின்கீழ் கூடியிருந்த மக்கள் அனைவரும் அந்த எட்டெழுத்து மந்திரத்தை மூன்றுமுறை கூறினார்கள்.

குருநாதர் வாக்கை மீறியதற்காக தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை; உலக மக்கள் அனைவரும் இந்த நாராயணமந்திரத்தை அறிந்துகொண்டு நற்கதி பெற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய புரட்சிகரமான – அக்காலத்தில் எவரும் சிந்திக்க அஞ்சும் செயலைச் செய்தார் ராமானுஜர் இப்படிப்பட்ட புனித நிகழ்வு நடந்த திருத்தலம் திருக்கோட்டியூர்.

 

திருக்கோட்டியூர் சவுமிய நாராயணர் கோயிலுள்ள சிம்மக்கிணறு புகழ்பெற்றது. நவகோள்களில் ஒருவரான புதனின் புதல்வன் புரூருவன், அசுர சக்கவர்த்தியாகத் திகழ்ந்தவன். ஒருசமயம் அவன், திருக்கோட்டியூருக்கு வந்தபோது மாசி மக நன்னாள் வந்தது. அத்திருநாளில் கங்கையில் நீராடி மகாவிஷ்ணுவை தரிசிக்க எண்ணியிருந்தான். அது நடவாமல் போகவே மகாவிஷ்ணுவை மனமார வேண்டினான். அவனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கிணற்றிலிருந்து கங்கை பொங்கி வந்தது. அதன் நடுவே மகாவிஷ்ணு அவனுக்குக் காட்சி தந்தார். தற்போது சிம்மக்கிணறு என்று சொல்லப்படும் அது கோயில் பிராகாரத்தில் அமைந்துள்ளது. இது மகாமகக்கிணறு என்றும் போற்றப்படுகிறது.

இந்தக் கிணற்றுத் தீர்த்தத்தில் மாசிமகத்தன்று நீராடி, சவுமிய நாராயணப் பெருமாளை தரிசித்தால் நைமிசாரண்யம் தலத்தில் தவம் செய்த பயனும், கங்கை நதியில் நீராடி முக்தியடைந்த பயனும், குரு க்ஷேத்திரத்தில் கடுகளவு தங்கம் தானம் செய்த பயனும் கிட்டுமென்று தலபுராணம் கூறுகிறது.

 

கோயில் சிறப்புகள் :

 

  • மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது.

 

  • கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமிய நாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்குப் பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

 

  • இத்திருத்தலத்தில் 5 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலமாக இத்திருத்தலம் கருதப்படுகிறது. அதாவது பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர் என்கிறது வரலாறு. மேலும் திருமங்கையாழ்வார் இப்பெருமாளை வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணன் என்று போற்றிப்புகழ்ந்ததாகவும் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • இக்கோயிலின் அஷ்டாங்க விமானத்தின் தென்பகுதியை விஸ்வகர்மா என்ற தேவ தச்சனும், வடபகுதியினை மயன் என்ற அசுரத்தச்சனும் அமைத்துள்ளனர். இவ்விமானமானது மூன்று தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.அதாவது ஓம், நமோ, நாராயணாய என்ற மூன்று பதங்களை உணர்த்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விமானத்தில் முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமி நாராயணப் பெருமாளும், கீழ்த்தளத்தில் நர்த்தனகிருஷ்ணரும், மூன்றாவது அடுக்கில், பரமபதநாதரும், இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திரநாராயணர் என நான்கு நிலைகளில் இறைவன் அருள்கிறார். இத்திருத்தலத்தின் தாயர் திருமாமகளுக்கு கோயில் வளாகத்தில் தனியாக சன்னதி உள்ளது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள், திருமாமகள் என்ற பெயர்களும் உண்டு.

 

  • இக்கோயிலின் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று உள்ளது. மேலும் பிரகாரத்தில் நரசிம்மர் இரண்யணை வதம் செய்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அஷ்டாங்க விமானத்தில் வட பகுதியில் நரசிம்மரும், அவருக்கு அருகில் ராகு, கேது ஆகியோர் இருக்கிறார்கள்.

 

  • இக்கோயிலில் சவுமிய நாராயண பெருமாள் சுவாமியோடு ஸ்ரீதேவி, பூதேவி, மட்டும் இன்றி கைடபர், இந்திரன், மது,புருரூப சக்ரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியேர் உள்ளனர். மேலும் இக்கோயி்லில் புத்திர பாக்யம் இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக இத்திருத்தலத்தில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார் . இவருக்குதான் பிரார்த்தனை கண்ணன் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் இல்லாதோருக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதாக ஐதீகம்.

 

  • பெருமாள் கோயிலினுள் சிவநந்தியும் இருக்கிறது. இக்கோயிலின் துவஜஸ்தம்பத்தினைப் பார்க்கும்போது அதற்கு பின்னால் நந்தி சிலை உள்ளதையும் காணமுடிகிறது. மகாவிஷ்ணு இரணியனை வதம் செய்ய கூட்டிய ஆலோசனைக்கூட்டத்தில் சிவனும் பங்கேற்றதன் சாட்சியாக இங்கு நந்தி சிலை அமைந்துள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது. இந்த லிங்கத்தினை சரபேஸ்வர லிங்கம் என்று குறிப்பிடுகிறார்கள். தனி சந்நதிக்கு முன்னால் இந்த லிங்கம் அருள்பாலிக்கிறது. இதற்கு முன்பாகவே சந்நதிக்குள் வேலுடன் காட்சி தரும் முருகன், மற்றும் சநகாதிமுனிவர்கள், நாகர் சிலைகள் ஆகியவை உள்ளன.

 

  • இக்கோயிலின் கோபுரத்தின் மீதிருந்துதான் ராமானுஜர் உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் உய்வடைய அஷ்டாக்ஷர மந்திரத்தினையும் அதன் விளக்கத்தினையும் இதனால் ஏற்படக்கூடிய பலன்களையும், அறிவித்தார். இதனால் ஊரைப்பார்த்தவாறு அவரது திருவுருவச்சிலை ஒன்று உள்ளது. கோயிலின் உச்சியில் இருந்து பார்த்தால் ஸ்ரீராமானுஜர் வாழ்ந்த வீடுகளைக் காணமுடியும். இந்த வீட்டினை கல் திருமாளிகை என அழைக்கின்றனர்.

 

  • திருக்கோஷ்டியூர் திருத்தலத்திற்குள் நுழைந்தவுடன் இடப்பக்கத்தில் ஸ்ரீராமானுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் தனித்தனியாக சந்நதிகளில் காட்சி தருகின்றனர்.சக்கரத்தாழ்வார் சந்நதியும், அதற்கு பக்கத்தில் ருக்மணி-சத்யபாமா சமேத நர்த்தன கிருஷ்ணணோடு காட்சி தருகிறார். மதுரை மன்னன் ஸ்ரீ வல்லபனின் குரு செல்வநம்பி என்பவர். இவர் திருக்கோஷ்டியூரைச் சேர்ந்தவர் ஆகையால் வருடந்தோறும் இவ்வூரில் கிருஷ்ணனின் அவதார திருவிழாவை சிறப்பாக நடத்துவது வழக்கம். மேலும் இவர் ஒருமுறை பெரியாழ்வாரை இந்த விழாவிற்கு அழைத்திருந்தார் பெரியாழ்வார் அவர் அழைப்பின் பேரில் நேரில் விஜயம் செய்தார். அப்போது அவர் அசந்து போனார் என்றுதான்சொல்லவேண்டும். பின்னர் “வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனில்” என்று பாடி சிறப்பித்தார். அவர் கண்டுகளித்த காட்சிகளில் ஒன்றுதான் (காளிங்க) நர்த்தன கண்ணன் வடிவம்.

 

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார் சவுமிய நாராயண பெருமாளை ‘வண்ண மாடங்கள் சூழ் திருகோஷ்டியூர் கண்ணன்’ எனப் பாடியுள்ளார். இப்பாடல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாடலாக விளங்குகிறது. ஆண்டாள் இத்திருத்தலத்தில் கண்ணனையே ஆயர்பாடிக் கண்ணனாக தான் கோபியராக இந்த ஊரே ஆயர்பாடியாக பாடி பரவிய தலம். பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, ராமர் அளித்த பரிசாக இந்த பள்ளிக்கொண்ட பெருமாளை விபீஷணன் சந்தோஷத்துடன் எடுத்துச் சென்றான். ஆனால், இப்பகுதிக்கு வந்த அவன் சற்றே இளைப்பாறும் பொருட்டு, நிலத்தில் சிலையை வைக்க, இறைவன் இங்கேயே நிலைத்துவிட்டார்.

 

  • புதனின் மகனாக கருதப்படும் புருரூப சக்ரவர்த்தியானவர் இத்திருத்தலத்தில் திருப்பணிகள் மேற்கொண்டார். மகாமக பண்டிகையின்போது பெருமாளைத் தரிசிக்க எண்ணினார். இவருடைய விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் பெருமாள் இத்திருத்தலத்தில் ஈசான்ய திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதிபொங்க சிறப்பு காட்சியளித்தார். இந்த கிணறானது மகாமக கிணறு என அழைக்கப்படுகிறது. 12 வருடங்களுக்கு ஒரு முறை மகாமக விழாவின்போது சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீ்ர்த்தவாரி செய்கிறார்.

 

 

திருவிழா :

ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் தெப்பத்திருவிழாவும், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி திருவிழாக்கள் காலத்தில் இத்திருத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருத்தலத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் ஒரு அகல் விளக்கினை வாங்கி சுவாமி சந்நதியில் வைத்து பின் வீட்டிற்கும் எடுத்துசென்றுவிடுகின்றனர். பின்னர் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து ஒருசிறுபெட்டியில் இதனை வைத்து மூடி பூஜையறைக்குள் வைத்துவிடுகின்றனர்.

இதில் பெருமாள் லட்சுமி எழுந்தருளியுள்ளதாக நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதால் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறுவதாக நம்புகின்றனர். தான் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறிவிட்டால் அடுத்த மாசி தெப்பத் திருவிழாவின் போது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட விளக்குடன் மற்றொரு நெய் விளக்கையும் சேர்த்துவைத்து தீர்த்த கரையில் வழிபடுகின்றனர். புதியதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கினை எடுத்து செல்கின்றனர்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில்,

திருக்கோஷ்டியூர் – 630 210.

சிவகங்கை மாவட்டம்.

 

போன்:

+91- 4577 – 261 122, 94862 – 32362

 

அமைவிடம் :

காரைக்குடியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் சென்று, அங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் திருக்கோஷ்டியூரை அடையலாம்.

 

 

Share this:

Write a Reply or Comment

fifteen + ten =