March 01 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பெரிய அய்யம்பாளையம்

அருள்மிகு உத்தமராயர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     உத்தமராயப்பெருமாள்

உற்சவர்   :     ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்தமராயப் பெருமாள்

தீர்த்தம்    :     பெருமாள்குளம்

ஊர்       :     பெரிய அய்யம்பாளையம்

மாவட்டம்  :     திருவண்ணாமலை

 

ஸ்தல வரலாறு :

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கக் குன்றும் அதில் ஒரு குகையும் உண்டு. ஊர்ச் சிறுவர்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, உச்சி வெயில் வேளையில் குகையில் சென்று இளைப்பாறி விட்டு, பிறகு மாலையில் வீடு திரும்புவர்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஊமைச் சிறுவன் தை மாதம், காணும் பொங்கலுக்கு மறுநாள் ஆடுகளை ஓட்டிச்சென்று மேயவிட்டு விட்டு, நடந்து சென்று குகையில் படுத்தான். உறக்கம் வரவில்லை.

தன் வாய்பேச முடியாத நிலையை நினைத்தபடி கண் கலங்கினான். அப்பொழுது தன்னருகில் யாரோ நிற்பதை உணர்ந்து  திடுக்கிட்டு எழுந்தான். அப்பகுதியில் அவன் அதுவரை பார்த்தறியாத  ஒரு பெரியவரைக் கண்டான்.

அவர் அவனருகில் வந்து அவன் தலைமீது கை வைத்தார். உடனே அவனுக்குள் ஒரு சக்தி ஊற்றெடுத்தது.

ஊருக்குள் போய் நான் வந்திருக்கிறேன் எனச் சொல்! என்றார் பெரியவர். மின்னல் வேகத்தில் ஊமைச் சிறுவன் ஓடிச்சென்று, “”நம்ம ஊரு மலைக்கு ஒரு பெரியவர் வந்திருக்காரு!” என்றான். அதுவரை பேசாத சிறுவன் பேசியதைக் கேட்டவர்களுக்கு ஒரே வியப்பு. அவன் எப்படி பேசுகிறான் என்று வியந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குகைக்கு வந்தனர்.

“வந்திருப்பது பெருமாள்தான்’ என உணர்ந்தனர். சங்கு, சக்கரத்துடன் சிறுவனின் சிலை உருவில் அங்கு காட்சி தந்தார் பெருமாள். ஒரு வயதானவர் வந்து, குழந்தைகள் நலனுக்காக இங்கு பெருமாள் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஊமைச் சிறுவனுக்கு பேச்சைக்  கொடுத்ததால்  “ஊமைக்கு குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்’ என்னும் பெயரிலேயே அன்று முதல் வணங்கத் தொடங்கினர்.

பெரிய அய்யம்பாளையத்தில் சுமார் 300 படிகளுடன் கூடிய குன்றின் மீது அமைந்த கோயில் இது. சுவாமி தனியே வந்து தங்கினார் என்பதால் தாயாருக்கு சந்நிதி கிடையாது. எதிரே கருடாழ்வார் தவிர மற்ற பரிவார மூர்த்திகள் இல்லை.  துவார பாலகர்கள் மற்றும் மூலவர்  சந்நிதிக்கு இருபுறமும் உள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக நாகர்கள் உள்ளனர் . நாகதோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக மஞ்சள் காப்பிட்டு வணங்குகின்றனர்.

சந்நிதிக்கு வலப்புறம் சிறுவனுக்கு காட்சி தந்த குகையின் இருபுறமும்  கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளனர்.  உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக நின்ற கோலத்தில் அபய, வரத, சங்கு சக்கரத்துடன் 4 கரங்களுடன் அருளுகிறார்.

படைவீட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி  செய்த சம்புவராயமன்னர்களின் (கி.பி. 1236-1379) காலத்தில்  விஜயநகர மன்னன் புக்கனின் மகனான குமாரகம்பணன்காலத்தில் இக்கோயில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்க் கல்வெட்டுகளில் உத்தமகிரி பெருமாள் திருவேங்கடமுடையார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கோயில் சிறப்புகள் :

  • சிறுவனுக்கு காட்சி கொடுத்தவர் என்பதால், உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

 

  • திக்கிப் பேசும் குழந்தைகள், பேச்சிழந்த குழந்தைகள், ஞாபக சக்தி குறைந்த குழந்தைகளுக்கு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஏழு வாரங்கள் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு பிரசாத தேனை அருந்தி வந்தால் குறைகள் படிப்படியாக குணமாகிறது என்கிறார்கள். கோயிலைச் சூழ்ந்துள்ள இயற்கை எழில், அதற்குக் கட்டியம் கூறுகிறது.

 

  • குழந்தைகள் பிறந்ததில் இருந்தே திக்குவாயுடனோ, உச்சரிப்பு சரியில்லாமலோ, பேசாமலோ இருந்தால் அக்குழந்தைகளின் பேச்சுத்திறனை வளர்க்க உத்தமராயருக்கு தேனாபிஷேகம் செய்து, தேனை சுவாமி முன்பாக குழந்தைகளின் நாக்கில் துளசியால் தொட்டு வைக்கிறார்கள். பேச்சாளர்கள், பாடகர்கள் குரல் வளத்துடன் இருக்க வேண்டி இங்கு வந்து வழிபடுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், துலாபாரம் செலுத்தியும் வருகின்றனர்.

 

  • தென்னகத்தில் அந்நிய கலாசார தாக்குதல்கள் மேலும் விரிவடையாமல் விஜயநகர நாயக்க மன்னர்கள் தடுத்ததோடு, அந்தத் தாக்குதல்களால் சிதறடிக்கப்பட்ட கோயில்களை புதுப்பிக்கவும் செய்தார்கள். கூடவே, புதிய கலையம்சம் கொண்ட கோயில்களையும் நிர்மாணித்தார்கள். அந்த வரிசையில் பெரிய அய்யம்பாளையத்தில் மலை மீது உருவான இந்தக் கோயில் ஒரு கற்றளி கோயிலாகும்.

 

  • சதுர வடிவான கருவறையில் ஏகாந்தமாக, தேவியர்கள் இன்றி சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் உத்தமராய பெருமாள் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். மேலிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்க, கீழ் இரு கரங்கள் திருப்பதி-திருமலை பெருமாளைப் போல அபய, கடி ஹஸ்தங்களாகக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

 

  • கருவறையை சுற்றியுள்ள புறச்சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் ஏதுமில்லை. அறைத் தூண்களும், மேல் கோஷ்டங்களும் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதியில் விஜயநகர கலைப்பாணியில் புடைப்புச் சிற்பங்களாக வீரன் அஞ்சலி செலுத்தும் நிலையிலும், அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து செல்லும் நிலையிலும் காணப்படுகிறார்கள்.

 

  • அதிஷ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்ற ஆறு பெரும் பகுதிகளாக கோயில் விமானம் அமைந்துள்ளது. சுவரின் மேலுள்ள பிரஸ்தரம் என்று அழைக்கப்படும் கூரைப் பகுதி, கருவறையை மூடும் அமைப்பாக உள்ளது. இவற்றின் நான்கு மூலைகளிலும் கருட பகவான் காட்சியளிக்கிறார். கிரீவப் பகுதியின் முதல் தளத்தின் நான்கு மூலைகளிலும் கர்ண கூடங்கள் அமைந்துள்ளன.

 

  • இரண்டாவது தளத்தை தெய்வ, மானிட உருவங்கள் தாங்கி நிற்கின்றன. குழல் ஊதும் அனுமன், நரசிம்மர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி ஆகிய தெய்வ உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. இங்குள்ள அர்த்த மண்டபம் சதுர வடிவிலும், தூண்கள் சதுரப் பட்டையாகவும் உள்ளன. தூண்களில் விஜயநகர காலத்திய பெண், திருமால், அனுமன், சங்கு, சக்கரம், அன்னப் பறவை, பெரியாழ்வார், ராமானுஜர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.

 

  • கருவறைக்கு எதிரில் கருட பகவான் மூலவரை நோக்கி கூப்பிய கரங்களுடன் காட்சியளிக்கிறார். கருவறை வாயில் காவலர்களாக துவார பாலகர்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ளனர்.

 

  • இங்குள்ள துவாரபாலகர்கள் சிலை விசேஷமானது. இவர்களது சிலை அரிதாக கிடைக்கும் சிவப்பு நிறமான ஒரு வகை கற்களால் செய்யப்பட்டதாகும். சுவாமி சன்னதிக்கு இருபுறமும் உள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக நாகர் இருக்கிறார்.

 

திருவிழா: 

நவராத்திரி, விஷ்ணு தீபம், வைகுண்ட ஏகாதசி, தை மாதம் மகரத்திருவிழா.

 

  • சனிக்கிழமைதோறும் சுவாமிக்குத் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

 

  • புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளும் முக்கியமானவையாகும். முதல் சனிக்கிழமை கருட சேவை நடைபெறும்.

 

  • நவராத்திரி விழாவும், விஜயதசமி அம்பு போடுதலும், விஷ்ணு கார்த்திகை சிறப்பு பூஜையும், புறப்பாடும் விமரிசையாக நடைபெறுகிறது.

 

  • உத்தமராயப்பெருமாள் சிறுவனுக்கு காட்சி தந்த நாளான ஒவ்வொரு தை மாதமும் 4-ஆம் தேதி மகரத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 7.30 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு உத்தமராயப்பெருமாள் திருக்கோயில்,

பெரிய அய்யம்பாளையம் – 632 315.

ஆரணி தாலுகா,

திருவண்ணாமலை மாவட்டம்.

போன்:    

+91 4181-248 224, 248 424, 93455 24079

அமைவிடம் :

உத்தமராயப் பெருமாள் திருக்கோயிலுக்கு வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் கண்ணமங்கலம் அல்லது வண்ணான்குளம் நிறுத்தத்தில் இறங்கி இத்திருத்தலம் செல்லலாம் வேலூர் – திருவண்ணாமலை செல்லும் வழியில் 23 கி.மீ., தூரத்திலுள்ள கண்ணமங்கலம் செல்ல வேண்டும். இங்கிருந்து 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம். கண்ணமங்கலத்தில் இருந்து பஸ் வசதி குறைவு. ஆட்டோ வசதி உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

four + 2 =