February 13 2021 0Comment

திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்:

திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்:
 
என் ஏற்ற வாழ்க்கையின் முதல் படிக்கட்டு ஆன திரு அமல்ராஜ் அவர்களுடைய அண்ணன் மகன் மார்ஷலின் திருமணம் இன்று infant Jesus church, நெல்லையில்….
 
எப்படி எல்லாம் சந்தோஷமாக திருமணம் நடைபெறுகிறது.
 
மாப்பிள்ளைப் பையன் எவ்வளவு சந்தோஷமாக எந்த பதட்டமும் இல்லாமல் புத்தம் புதிய பென்ஸ் காரில் தன் மனைவியுடன் ……
 
திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்- என் திருமணத்தை…
 
திடீர் திருமணம்
 
பணம் இல்லை
 
முன்நின்று எடுத்துச்
செய்ய ஆள் இல்லை
 
அடுத்து என்ன என்று
பதட்டம்
 
நம்மால் முடியுமா என்கின்ற
கேள்வி ஒருபுறம்
 
இனம்புரியா பயம் மறுபுறம்
 
கடலோடு
வாழ்க்கை நடத்தும் செந்தூர் முருகனின் பாதத்தில்
என் திருமணம் பெரிய
கடனோடு
 
சந்தோஷம்
பயம்
பதட்டம்
கவலை
 
என்ற ஒருவித கவலையோடு
கலங்கிய எண்ணத்துடன்
அடுத்த கட்ட நகர்வை நோக்கி
அடி வைத்த மறக்கமுடியாத நாளை இன்று யோசித்து பார்க்கின்றேன்
 
என்னுடைய திருமணம்
இன்று நடந்தது போல் பதட்டமில்லாமல் நடந்திருந்தால்….
 
ஒப்பீடு தவறு
என்றாலும்
எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் காரணம் கொண்டு நடந்திருக்கின்றது
நடக்கப் போகின்றது
 
என்கின்ற விதியின்படி
 
சற்று திரும்பி உற்று பார்க்கின்றேன்
 
என் திருமணத்தில்
நான் நிராயுதபாணியாக நின்ற பொழுது தண்டாயுதபாணி துணை நின்றான் எனக்கு….
 
பணத்திற்கு தடுமாறிய போது என் உயிர் நண்பன் சுகுமார் அமெரிக்காவிலிருந்து கேட்காமலேயே உயிர் கொடுத்தான் பணம் கொடுத்து எனக்கு…
 
பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தில் திருமணம் எல்லோருக்கும் வாய்க்கும்.
எத்தனை பேருக்கு திருச்செந்தூரில் திருமணம் வாய்த்திருக்கும்…
எனக்கு அவ்வாறு நடந்தது என்பது ஒரு அதிசயமே…
 
அன்று நான் பயணப்பட பென்ஸ் இல்லை என்றாலும் பெரிய மனது கொண்டோர் நாலு பேர் எனக்காக என்னுடன் பிரயாணப்பட இருந்தார்கள் என்பது ஒரு அதிசயமே….
 
பெரிய வீடு
பெரிய கார்
பெரிய சொத்து
இருந்தால் தான்
திருமணம் என்ற நிலை இன்று ஆனபிறகு இவை எதுவும் இல்லாமல் எனக்கு வாக்கப்பட ஒருத்தி கிடைத்ததும் ஒரு அதிசயமே….
 
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் அதிசயமே என்று நினைத்து
வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு
இன்றைய திருமணத்தை அதிசயமாக பார்த்ததில் வியப்பொன்றுமில்லை….
 
அதிசயத்து போனதற்கு காரணம் நெல்லிகாய்க்கும் ஆப்பிளுக்கும் வித்தியாசம் தெரிந்தால் தான்….
 
வாழ்க்கை சற்று நீண்டு இருந்தால் மீண்டும் ஒரு திருமணம்
 
இல்லாவிட்டால் மீண்ட பிறகு இன்னொரு புதிய திருமணம்
 
இரண்டும் நல்லதே
எப்பொழுதும்
 
என்கின்ற உணர்வுடன்
கடந்து போகின்றேன் கடந்த காலத்தை அசை போட்டவாறு….
 
அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
 
Share this:

Write a Reply or Comment

one × 4 =