நானும், குறட்டையும்:-

ஸ்ரீ

Vastu - Andal P.Chockalingamதூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும்.

உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும்.அந்த வகையில் நம் தூக்கத்தை கெடுக்கும் முக்கிய விஷயமே குறட்டை தான்.

சமீபத்தில் எனக்கு குறட்டை அதிகம் வருவதாக உணர்ந்ததால் நண்பர் Dr.Koushik Muthuraja M.D., (Pulmonary Medicine) @ +91 98946 78080 அவர்களை சந்தித்தேன். அவர் உங்களின் குறட்டை எந்த அளவுக்குப் உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பதை முதலில் கணித்து பின் முடிவெடுக்கலாம் என்று சொல்லி என்னை ஓரிரவு அவர் மருத்துவமனையில் தூங்கக் கூறி, நான் தூங்கும் சமயத்தில் என்னுடைய குறட்டை அளவு, இதயத் துடிப்பு, மூளையின் செயல்பாடு, கண், அடிவயிற்றின் அசைவு, மூக்கு மற்றும் வாய்ப் பகுதிகளில் காற்றின் போக்கு, நாடித் துடிப்பு, ரத்தத்தில் இருக்கிற ஆக்சிஜன் அளவு, எத்தனை முறை மூச்சுத் திணறல் உண்டாகிறது இப்படி பலதரப்பட்ட விஷயங்களைக் கவனித்து என்னுடைய குறட்டை தூக்கத்தை அக்கு வேறு ஆணிவேறாக அலசி விட்டார். இந்த அக்குவேறு ஆணி வேறு அலசலை “பாலிசோம்னோகிராம்” என்கிறது மருத்துவம்.

பின் குறட்டையினால் எனக்கு ஏற்பட இருந்த பாதிப்புகளை பட்டியலிட்டார். நான் இனி என்ன செய்ய வேண்டும் என அறிவுரையும் கொடுத்தார். அப்போது தான் குறட்டை சாதரணமான ஒன்றல்ல என்றும் அது ஒரு கொடிய நோய் என்றும் தெரிந்து கொண்டேன். அந்த வகையில் குறட்டையை பற்றி நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

குறட்டை எப்படி ஏற்படுகின்றது:

நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

நாம் மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழல் வழியாக உள்ளே செல்லும் போது தடை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

மூச்சுக் குழலில் உள்ள தசைகள் தளர்வடைவதால் அதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து போகும். மூச்சுக்குழலின் உட்புறம் குறுகிவிடும். இதனாலும் குறட்டை ஏற்படும்.

சிலருக்கு கழுத்து சிறியதாக இருக்கும். இதனால் கழுத்தின் உட்புறம் கொழுப்பு அதிகமாகப் படியும். இதனாலும் குறட்டை ஏற்படும்.

சிலருக்கு பிறவியிலேயே கீழ்த்தாடை உட்புறம் வளைந்திருக்கும். இதனால் மூச்சுப் பாதை குறுகலாகிவிடும். இதனால் மூச்சுக் குழலுக்குள் காற்று சென்று வருவதில் பிரச்னை ஏற்படும். இதனாலும் குறட்டை ஏற்படும்.

சிறுவர்களுக்கு டான்சில், அடினாய்டு அலர்ஜி காரணமாகத் தொண்டையில் வீக்கம் ஏற்படும். இதனால் மூச்சுப் பாதை குறுகலாகி குறட்டை ஏற்படும்.

குறட்டையால் ஏற்படும் மிகப்பெரிய அபாயம்:-

சாதாரண நிலையில் ஒருவர் விழித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய ரத்தத்தில் 100 சதவிகிதம் ஆக்சிஜன் இருக்கிறது என்றால், அவர் தூங்குகிற வேளையில் 90 சதவிகித ஆச்சிஜன் தான் இருக்கும். ஆனால், ஒருவர் குறட்டை விட்டுத் தூங்குகிறார் என்றால், சுவாசம் தடைப்பட்டு அவருடைய ரத்தத்தில் ஆச்சிஜன் அளவு 70 சதவிகிதமாகக் குறைந்து விடும். இப்படியே தொடர்ந்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தால், குறைச்சலான ஆச்சிஜனால் மூளைத் திறன் குறைந்து, மறதி, எரிச்சல், கோபம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆச்சிஜன் குறைவினால் இதயம் செயலிழந்து போகும் அபாயம் ஏற்படுகிறது.

நிறைய சமயங்களில்  சுவாசத்துக்குத் தேவையான காற்று கிடைக்காமல் மூச்சுத் திணறல், மூக்கடைப்பு ஏற்படுகிறது. எனவே குறட்டை விடுபவர்கள் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்வார்கள். சீரான, தொடர்ச்சியான தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். அவர்களுக்குக் காலையில் எழுந்தவுடன் சோர்வு, தலைவலி ஏற்படும். உடலில் உற்சாகம் இருக்காது. எப்போதும் சுறுசுறுப்பில்லாமல் மந்தமாகத் தூங்கித் தூங்கி விழுவார்கள்.

நன்றாகத் தூங்காததால் உடலின் செயற்பாடுகளில் சிக்கல் ஏற்படும். ஹார்மோன்கள் சீராகச் செயல்படாது. தைராய்டு பிரச்னை, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படும். ஏற்கெனவே இந்த நோய்கள் இருந்து நன்றாகத் தூங்காவிட்டால் அவற்றைக் குணமாக்கவும் முடியாது. பகலில் தூங்கி வழிவதால் வேலைகளை நன்றாகச் செய்ய முடியாது.

குறட்டை விட்டு தூங்கும் போது, ஒரு மணி நேரத்திற்கு 15-க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ (Obstructive Sleep Apnea):

குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது ‘அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ (Obstructive Sleep Apnea) எனப்படும். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும்.

“அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் “எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம்.
(0 – எப்போதும் இல்லை, 1 – குறைந்த அளவு வாய்ப்பு, 2 – போதுமான அளவு வாய்ப்பு, 3 – அதிக அளவு வாய்ப்பு).

1. எப்போதெல்லாம் தூக்கம் வருகிறது?

அ) “டிவி’ பார்க்கும் போது
ஆ) “மீட்டிங்’கில் உட்கார்ந்திருக்கும் போது
இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது
ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது
உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது
ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், “டிராபிக் சிக்னலில்’ நிற்கும் போது

மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா? இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம். 12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம்.

குறட்டை நோயைச் எப்படி சரி செய்ய வேண்டும்:-

குழந்தைகளுக்கு வரும் குறட்டை, டான்சில், அடினாய்டு வீக்கத்தினால் வருகிறது என்றால், அவற்றை மருந்து, மாத்திரைகளின் மூலம் குணப்படுத்த முயற்சிக்கலாம்.

முடியாத போது அறுவைச் சிகிச்சை செய்து சரிப்படுத்தலாம்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கழுத்துப் பகுதியில் கொழுப்பு அதிகமாகப் படிந்திருக்கும். அந்தக் கொழுப்பை லேசர் சிகிச்சையின் மூலமாக அகற்றிவிடலாம்.

கீழ்த்தாடை உட்புறமாக வளைந்திருப்பவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் தாடையைச் சரி செய்தால் குறட்டை நோய் நீங்கிவிடும்.

இப்படி எந்தச் சிகிச்சையாலும் குறட்டை விடுவதை சரி செய்ய முடியவில்லை என்றால், குறட்டைவிடுவதைத் தடுக்க CPAP கருவி உள்ளது. அதைப் பயன்படுத்தலாம்.  தூங்கும்போது இந்தக் கருவியின் ஒருமுனையில் உள்ள முகமூடியை மூக்கில் பொருத்திக் கொள்ள வேண்டும். கருவியை ஆன் செய்துவிட்டுக் கொண்டு தூங்க வேண்டும். குறட்டை வரவே வராது.

CPAP (Continuous Positive Airway Pressure) எப்படி செயல்படுகின்றது:Vastu - Andal P Chockalingam

மூச்சுப் பாதையில் தசை அடைத்துக் கொண்டு குறுகலாகிவிடுகிறது. அதனால் குறட்டை வருகிறது. நாம் உள்ளிழுக்கும் காற்று அந்தக் குறுகலான பாதையை விரித்துக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும்; வெளியே வர வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட அளவு காற்றழுத்தம் தேவை. நாம் சாதாரணமாகச் சுவாசிக்கும்போது அந்த அளவுக்குக் காற்றழுத்தம் இருப்பதில்லை. இந்தக் கருவி ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு காற்றழுத்தம் தேவையோ, அந்த அளவு அழுத்தத்துடன் மூச்சுப் பாதைக்குள் காற்றை அனுப்பி வைக்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான காற்று கிடைக்கிறது. எனவே குறட்டைவிடாமல், எந்தத் தடங்கலுமில்லாமல் நன்றாகத் தூங்க ஆரம்பிக்கிறார்கள். குறட்டை விட்டு இவ்வளவு நாட்கள் தூங்கியதால் உடலுக்கு ஏற்பட்ட பல பாதிப்புகள் குணமாக ஆரம்பிக்கின்றன.

அப்படியானால் வாழ்நாள் முழுக்க இந்தக் கருவியைப் பொருத்திக் கொண்டுதான் தூங்க வேண்டுமா? என்று கேட்கலாம். சில நோய்களுக்கு வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரை, ஊசி போட்டுக் கொள்வதைப் போலத்தான் இதுவும். CPAP Machine -ஐ வீட்டிலே வைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்;

 

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

seventeen + 13 =