January 13 2023 0Comment

ராமா ராமா ராமா….

ராமா ராமா ராமா….

நான் ரசித்தது
சற்றே பெரிய பதிவு
பொறுமையாக படிக்கவும்…..

இராமருக்கும் தமிழர்களுக்கும்
என்ன சம்பந்தம்!!!??!!

“கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர் தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே”

– திருவருட்பா

இதுல ஸ்ரீராமர், தசரதர் என்றெல்லாம் வருகிறது? தமிழ் நூல்களில் எப்படி இதெல்லாம்? எதாவது சமஸ்கிருத ஸ்லோகமா???

இது சமஸ்கிருத ஸ்லோகம் எதுவுமில்லை. “திருவருட்பிரகாச வள்ளலார்” எழுதிய திருவருட்பா
எனும் பொக்கிஷத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா???
அவர் எழுதிய “இராமநாமப் பதிகத்தின்” இரண்டாவது பாடலில் வரும் வரிகள் இவை.

வள்ளலார் ராமரை புகழ்ந்து எழுதியிருக்காரா?

வள்ளலார் ஆரிய ராமனுக்கு எதிரானவர்னு தானே நமக்கு இதுவரை தமிழ்நாட்டில் சொல்லப்பட்டுள்ளது????

18 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாடி இதுபோல ஏதாவது பாடல் இருக்கா?

சோழர் கால கட்டிடக்கலைகள் பற்றி பார்த்தால் இதற்கும் பதில் உண்டு

“திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக..

இதுவும் சோழர்களின் கட்டிடக்கலை சம்பந்தமானது தான்.

அதாவது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள காமாக்ஷி அம்மன் சந்நிதியில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில் இது ஏற்கனவே இராமர் கோவிலாக இருந்ததாகவும் அது இடிந்துவிட்டதால் பிற்காலத்தில் அதை காமாட்சி அம்மன் கோவிலாக கட்டியுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதாவது இதற்கு சான்றாக பொ.ஆ. 941 ஆம் ஆண்டில் முதலாம் பராந்தகச் சோழனின் 34 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட இன்று காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டு கூறுவதாவது:

திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக கொடுத்த தகவல் உள்ளது.இங்கே இராமன் இருக்குமிடம் அயோத்தி என்பதால் அயோத்தி நின்றருளிய ஸ்ரீராகவன் என்று சான்று பகிர்வதாக குடந்தை சேதுராமன் கூறுகிறார்…!

சோழர்களின் கட்டிடக்கலையிலும் இராமர் கோவிலா ???

தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தமே இல்லைனு தானே சொல்லப்பட்டு இருக்கிறது இதுவரை. இங்க பார்த்தால் சோழர்களே இராமர் கோவில் கட்டியிருக்காங்களே…

அடுத்து பாண்டியர்களின் கட்டிடக்கலை பற்றி அடுத்து பார்ப்போம்.

“ஸ்ரீ ராகவேந்திர பெருமாளுக்கு வைத்த பத்துமா நிலம்”

அதாவது பொ.ஆ 863 ல் பாண்டியன் மாறஞ்சடையனின் இரண்டாம் ஆட்சியாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி மனோன்மனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் இராமர் கோவிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்ட தகவல் உள்ளது. இந்த கல்வெட்டின் காலத்தை குடந்தை சேதுராமன் அவர்கள் இது வரகுணன் காலத்து கல்வெட்டாக இருக்கலாம் என்று எழுதியதோடு பொ.ஆ 864 க்கு முன்பே தமிழகத்தில் இராமர் கோவில்கள் இருந்துள்ளது என்ற தகவலை இக்கல்வெட்டுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார்…..!

ஆதாரம் : (South Indian Inscription volume 14)

அடுத்து

“எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம இங்கு வருக அரசேவருக முலை உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்”

– திருப்புகழ்

அதாவது கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை “அருணகிரி நாதர்” வர்ணித்து முருகனுடன் ஒப்பிடுகிறார்

இது திருப்புகழில் வரும் பாடல்.
இதை எழுதியவர் ஆகச்சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதர்.

அடுத்து

கீழ்கண்ட சித்தர் சிவவாக்கியர் தன் பாட்டிலும்

“நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா? கோனதேது குருவதேது? கூறிடும் குலாமரே
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம் ஈனதேதூ? ராம ராம ராம என்ற நாமமே”

என்று ராமரைப் பற்றி சொல்லி உள்ளார்

அடுத்து

“மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே”

– சிலப்பதிகாரம்

இளங்கோவடிகளால் எழுதப்பட்ட இந்த சிலப்பதிகார வரிகளில் இராமனோ, இராமயணமோ வருகிறதா? என்பதை அப்பாடலுக்கு கூறும் விளக்க உரைகளில் உள்ளதா என்று நீங்களே பார்த்து புரிந்து கொள்ளுங்கள்

பொருள் : மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம்
தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?

அடுத்து சங்ககாலத்தில் இராமர்

“அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்”

– புறநானூறு.

அதாவது உன்பொதி பசுங்குடையார் என்ற சங்கப்புலவர் இந்த புறநானூற்று வரிகளால் சொல்வது என்னவெனில்,

பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில் இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று, கிணைப்பறையைக் கொட்டி வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன், இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம் கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும், காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர். மிகுந்த வலிமையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். அதுபோல், பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு, நாங்களும் அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்….!

இதுமட்டுமின்றி அகநானூறு, பழமொழி நானூறு போன்ற இன்னபிற சங்க இலக்கியங்களிலும் இராமனைப்பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும் குறிப்புகள் உண்டு என்பதை கூறிக்கொள்வதோடு தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தம் உண்டு என்பதை வள்ளலார் துவங்கி சித்தர்கள், காப்பியக் கவிகள் முதலான சங்கால புலவர்கள் வரை நன்கு அறிந்திருந்தனர் என்பதை மேற்கூறிய தரவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்

முடிவு உங்களுடையது

ப/பி

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

three × five =