October 28 2021 0Comment

நாய்கள் 2 சிறகுகள் 8

நாய்கள் 2 சிறகுகள் 8

ஷாகி என்று ஒரு தெரு நாய் எனக்கே எனக்காக என்று சொல்லும் அளவிற்கு என்னுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தது.
வயோதிகம் மற்றும் உடல்நிலை காரணமாக ஷாகி மறைந்த பிறகு வேறு எந்த நாயுடனும் எனக்கு பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை.
அதிலிருந்து வேறு எந்த நாயையும் எனக்கும் பிடிக்கவில்லை.
வேறு எந்த நாயுக்கும் என்னையும் பிடிக்கவில்லை…
இருந்தாலும் சில மாதங்களுக்கு பிறகு ஷாகியுடைய அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட ஒரு குட்டி ஷாகிக்கு என்னை மிகவும் பிடித்துப் போனதால் மீண்டும் நாயுடன் ஒரு வாழ்க்கை ஆரம்பமாகி ஆனந்தமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது அதுவும்இரண்டும் சிறந்த நாய்கள் என்று பிறர் சொல்லும் அளவிற்கு.
எனக்கே எனக்கான சொந்த பக்கத்தில் முதல் பக்கத்தை நான் விரும்பும் அதிகம் நேசிக்கும்
இந்த தெரு நாய்க்கு தான் கொடுப்பேன் நாயை இந்த வகையில் ஓரளவுக்கு நன்கு அறிந்தவன் என்கிற முறையில் எனக்கு ஒரு சிறு கோபம் திருக்கடையூர் அபிராமி பட்டர் மேல் உண்டு.
காரணம்
நாயே னையுமிங்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயே னறியுமறிவு தந்தாய் என்னபேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால்திருத் தங்கச்சியே
என்று பாடுகின்றார்.
மலையரசன் இமவான் மகளே, திருமாலின் தங்கையே, என் தாயே!
நாயைப் போல் எளியவனான என்னை ஒரு பொருட்டாக மதித்து விரும்பி ஏற்றுக்கொண்டதுடன் அறிவில்லாத எனக்கும் உன் இயல்பை அறிந்து கொள்ளும் அறிவையும் கொடுத்தது நான் பெற்ற பெரும் பேறாகும்.
என்பதே அதன் அர்த்தமாகும்.
தெய்வத்தை பெருமை படுத்துவதற்காக அபிராமியின் அருள் தனக்குக் கிடைத்தது தகுதிக்கு மீறிய சலுகை என்று பாடும் பட்டர் நாய் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டதோடு மட்டும் நிற்காமல்
சுயமாகச் சிந்திக்கும் அறிவில்லாமல் சோறு போட்ட இடம் சொர்க்கமென நினைக்கும் ஐந்தறிவுப் பிராணியைப் போன்ற தன்னை ஒரு பொருட்டாக மதித்து விரும்பி ஏற்றுக் கொண்ட அபிராமியிடம் விசுவாசமுள்ள நாய் என்கிறார்.
அபிராமி பட்டரே இது சரியல்ல.நீ
இந்நாளில் வாழ்ந்திருந்தால்
நாயை தொட்டு இருக்க மாட்டாய்.
வாழும் மனிதர்களை விட பேயே பரவாயில்லை என்று பாடி இருக்க வாய்ப்புண்டு.
கட்டிய மனைவிக்கு
பெற்ற தாய் தந்தைக்கு
பெத்த பிள்ளைகளுக்கு
தன்னை நம்பி வரும் ஜீவராசிகளுக்கு
என்று சோறு போடாமல்
அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வாழும் பல மனிதர்கள் இந்த பூமியில் உண்டு
என்பதை நீயும் உணர்ந்திருப்பாய்.
இப்போது சொல்கின்றேன்
உன் காதில் இது விழும் என்று நம்பி.
மனிதனை விட எல்லா விதத்திலும் உயர்ந்தது நாய்கள்
நம்பிக்கை இருந்தால் வானிலிருந்து மண்ணுக்கு வந்து அவற்றுடன் பழகி பார்
எனக்கு தெரியும் நீ இந்த சவாலை ஏற்றுக் கொள்ள மாட்டாய் என்று.
அந்த வகையிலேயே நாயை கேவலப்படுத்தியது தவறு என்று அபிராமிப் பட்டருக்கு தெரியாமல் போனாலும் அவர் ஏற்றுக் கொள்ளாமல் போனாலும் நாம் புரிந்து கொள்வோம்.
பெற்ற தாயே தடுத்தாலும்
இன்றைய மனிதனிடமிருந்து
நாய் காப்போம்
அதனிடமிருந்து மனிதனுக்கு
அன்று இருந்து
இன்று இல்லாத
மனிதன் மறந்து போன
நன்றியை கற்போம்
இனியும் நன்றிகெட்ட நாய்களா என்று சொல்லாமல் நன்றி கெட்ட மனிதர்களே இல்லாத சூழ்நிலை உருவாக்குவோம்
நாயுடன் மன்னிக்கவும் என்றும் நன்றியுடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
May be an image of child, dog and outdoors
Share this:

Write a Reply or Comment

fifteen + one =