May 21 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்னமலைல்

  1. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     தண்டாயுதபாணி

தல விருட்சம்   :     அரசமரம்

ஊர்            :     மஞ்சூர்

மாவட்டம்       :     நீலகிரி

 

ஸ்தல வரலாறு:

கடந்த 1936-ம் ஆண்டு கீழ்குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் சிறுவன் கிருஷ்ணனைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடினார்கள். அப்போது அவன் கடவுளைத் தேடி அங்குள்ள சிவன் குகைக்குள் இருந்தான். அங்கேயே 3 ஆண்டுகள் முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அவனுக்கு முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் இங்கே தான் இருக்கிறேன். பல ஆண்டு களுக்கு முன்னால் வேள்விகளும், அன்னதானமும் நடைபெற்ற புனிதமான இடம் இது. இங்கு மீண்டும் அன்னதானம் தொடர வேண்டும். நான் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறேன். அதற்கான வேலையை நீ தொடங்குவாயாக’ என்று கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஏழையான கிருஷ்ணனால் எப்படி கோவில் கட்ட முடியும். அதே நேரத்தில் முருகனின் கட்டளையை நிறைவேற்ற கிருஷ்ணன் கற்களை சேகரித்து வந்து, மலை உச்சியில் அடுக்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஊர்மக்கள் விஷயம் கேள்விப்பட்டு, அவனுடன் இணைந்தனர். இதன் பலனாக அங்கு 1975-ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

இன்று அழகாக காட்சி அளிக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் அன்னதானம் செய்தால் வேண்டுதலை முருகன் நிறைவேற்றுவதாக ஐதீகம் உள்ளது. அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார்.

 

  • இத்தலத்து முருகன் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா நந்தாஜியின் கனவில் முருகன் வந்து சொல்கிறார். அதன்படி அடுத்தநாள் முருகனுக்கு பூசாரிகள் முருகனின் கட்டளைப்படி அலங்காரம் செய்கின்றனர். இது இன்றளவும் நடந்துவரும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்

 

  • கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பாக அன்னம் இட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

 

  • மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் நாலாபுறமும் மலைகள் சூழ கோயில் அமைந்துள்ளது கண்கொள்ளாக் காட்சி. இந்த சுற்றுச்சூழல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதி தருகிறது.

 

  • படுகர் இன மக்கள் இங்கு பஜனை நடத்துகின்றனர்.

 

  • கோவிலுக்குச் செல்வதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள விநாயகரை தரிசிக்க வேண்டும். விநாயகரை வணங்கி விட்டு சென்றால் வலதுபுறம் அன்னதானக் கூடம் உள்ளது. இதற்கு அடுத்து வலது புறம் சென்றால் தண்டாயுதபாணியை தரிசனம் செய்யலாம்.

 

  • கருவறையில் முருகப்பெருமான் கையில் தண்டம் ஏந்தி காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள சிவன் குகை, இங்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் உள்ளது.

 

  • நாகராஜர் சன்னிதி அருகில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் சிவன்குகை மற்றும் மலையை வந்து முத்தமிட்டு செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.

 

  • இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது சிவன் குகை. அன்னமலை தண்டாயுதபாணி கோயிலில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இந்த குகை அமைந்துள்ளது. குகைக்கு செல்ல கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அன்னமலையில் இருந்து கீழ் பக்கமாக நடைவழியாக இங்கு செல்லலாம். மலைப்பாதையில் கவனத்துடன் நடந்து சென்றால் ஒரு குகை வருகிறது. இந்த குகையில் தான் அன்னமலை கோயில் அமைய காரணமாக அமைந்த கிருஷ்ண நந்தாஜி, தவம் செய்ததாக தகவல். அப்படியே இந்த குகையை ஒட்டி அமைந்துள்ள மலைகள், பள்ளத்தாக்கு போன்றவற்றையும் ரசிக்கலாம். இந்த குகைக்கு சென்று வர சுமார் 30 நிமிடங்கள் வரை ஆகும்

 

  • அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 

 

திருவிழா: 

சித்திரையில் காவடி பெருவிழா, ஆகஸ்ட்15 குரு ஜெயந்தி அன்று அன்னதானம், கிருத்திகை மற்றும் முருகனுக்கு உகந்த நாட்கள்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

மஞ்சூர்- 643 219

நீலகிரி மாவட்டம்.

 

போன்:    

+91- 423- 250 9353

 

அமைவிடம்:

கோவையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும், ஊட்டியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அன்னமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி, குன்னூரில் இருந்து மஞ்சூர் குந்தாவுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கோவையில் இருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக அன்னமலைக்கு தினமும் காலை, மாலையில் பஸ் வசதி உண்டு.

Share this:

Write a Reply or Comment

19 + sixteen =