March 08 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பவானி

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சங்கமேஸ்வரர் சங்க முகநாதேஸ்வரர்

அம்மன்         :     வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார்    மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி

தல விருட்சம்   :     இலந்தை

தீர்த்தம்         :     காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்

புராண பெயர்    :     திருநணா, பவானி முக்கூடல்

ஊர்             :     பவானி

மாவட்டம்       :     ஈரோடு

 

புனித நகரமாம் காசியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில்’ மூழ்கி எழுந்தால், செய்த பாவங்கள் விலகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தென்னகத்தின் காசி என்று போற்றப்படும் பவானி கூடுதுறையில், காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் கூடுமிடம் ‘தட்சிணப் பிரயாகை’ என்றழைக்கப்படுகிறது. கூடுதுறையில் மூழ்கி எழுந்து, சங்கமேஸ்வரரை வழிபட்டு,  தோஷங்களை நீக்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நாடிவரும் இடமாக உள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி நகரம்.

ஸ்தல வரலாறு :

பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க வந்த குபேரன், இந்த தலத்துக்கு வந்தபோது, யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் தவம் செய்வதைக் கண்டார். அத்துடன், மான், புலி, சிங்கம், பசு, யானை, நாகம், எலி என பல்வேறு உயிரினங்களும் ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவத்தில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதைக் கண்டு குபேரன் ஆச்சர்யம் அடைந்தார். அந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த அவர், இறைவனின் தரிசனம் வேண்டி பவானியில் தவம் மேற்கொண்டார்.

குபேரனின் தவத்தால் மகிழ்ந்த சிவனும், திருமாலும்  காட்சியளித்து அருள்பாலித்தனர். அத்துடன் அங்குள்ள இலந்தை மரத்தின்கீழ் சுயம்பாகத் தோன்றி அருள்புரிந்தார் ஈசன். அப்போது, அளகேசன் என்ற பெயரால் இத்திருத்தலத்தில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுமென குபேரன் வரம் கேட்டுப் பெற்றார். அன்றிலிருந்து இத்தலம், தட்சிண அளகை என்ற பெயர் பெற்றது. சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப் பெருமாளாக திருமால் எழுந்தருளினார்.

சங்கமேஸ்வரர் கோயிலில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரம், வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

இக்கோபுரத்தையொட்டி வைகுண்டவாசலும் உள்ளது. இக்கோயிலில் உள்ள கல் சிற்பங்கள்,  புராணக் கதைகள், தேவாரக் கதைகளை விளக்குவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தல விருட்சம் இலந்தை மரம். இறைவனை வேண்டி இக்கனியை உண்டால் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

ஆண்டுதோறும் மாசி மகம் ரத சப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி, சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் மீது விழுவது சிறப்பம்சம்.

பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு. சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா, தேரோட்டத்துடன் விமரிசையாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதேபோல, சிவராத்திரியன்றும் ஏராளமான பக்தர்கள் பவானிக்கு வருகின்றனர். மறைந்த முன்னோருக்கு அமாவாசை நாட்களில் கூடுதுறையில் தர்பணம் செய்வதற்கும், பிண்டம் கொடுப்பதற்கும் ஆயிரக்கணக்கானோர் வந்து,  செல்கின்றனர்.

ஆடி மாதம் 18-ம் தேதி பக்தர்கள் கூட்டத்தால் பவானி நிரம்பி வழியும். கூடுதுறையில் கூடும் சுமங்கலிப் பெண்கள், தேங்காய், பழம், பூ, காதோலைக் கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர். காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து, மாங்கல்யம் நிலைக்கவும், திருமணமாகாதவர்கள் திருமணம் கைகூடவும் வேண்டி மஞ்சள் நூலை கையில் அணிந்து கொள்வர். பூஜை செய்த பொருட்களை ஆற்றில் விட்டு வழிபடுவர். புதுமணத் தம்பதியினர், காவிரித் தாய்க்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை எடுத்து வந்து ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் கூடுதுறையில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில், வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மட்டுமின்றி, ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து, சைவ – வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.

 

கோயில் சிறப்புகள் :

  • சங்கமேசுவரப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • மூலவர் கிழக்கு நோக்கியும், குபேரன் பூஜித்ததால் ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

 

  • கோவிலுக்கு இரண்டு வாயில்கள். இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.

 

  • ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது.

 

  • பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம் வைணவம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே ராஜகோபுரம். சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது.

 

  • இத்தல விநாயகர் சங்கம விநாயகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

 

  • விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது.

 

  • ராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளார்.

 

  • ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு சூரிய பூஜை நடப்பது சிறப்பு.

 

  • ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியில் அருளுகிறார். அடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து மிளகு ரச சாதத்துடன் அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால் உடனடி நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

 

  • வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம்.

 

  • இங்கு கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.

 

  • நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன.

 

  • சிவனுக்கும் அம்மனுக்கும் இடையே முருகன் தனி சன்னதியில் உள்ளார். இது சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும்.

 

  • இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது.

 

  • திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் பாதிப்பில் இருப்பவர்கள் இன்றும் ஜூரகரீஸ்வரரை வணங்கினால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.

 

  • இத்தலம் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயர் உண்டு. இதை சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி உள்ளது.

 

  • வட இந்தியாவில் கங்கையுடன், யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு சரஸ்வதி நதி கண்ணுக்கு தெரிவதில்லை.

 

  • இது போல தென்னகத்தில் காவிரியுடன், பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன. இதில் அமிர்தநதி மட்டும் கண்ணிற்கு தெரியாது.

 

  • இந்த நதியானது பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம், “தென்திரிவேணி சங்கமம்’ என அழைக்கப்படுகிறது. எனவே இத்தல இறைவன் சங்கமேஸ்வரர் எனப்படுகிறார்.

 

  • அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப்பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு “யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)’. எனவே இத்தலத்திற்கு “திருநணா’ என்ற புராணப்பெயரும் உண்டு.

 

  • கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது.

 

  • பதுமகிரி அமைந்துள்ள, காயத்ரி லிங்கேசுவரர் சன்னதி உள்ளது. இம்மலையும் அதனை அடுத்துள்ள காயத்ரி மடுவும், காயத்ரி லிங்கமும் மிகப்பழமையானதாகும்.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரிக் கரையோரம் “காயத்ரி லிங்கேசுவரர்” தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.

 

  • கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்களின் திருஉருவங்கள் உள்ளன. கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள தலவிருட்சம் இலந்தை மரம் தனிச் சிறப்பு கொண்டது. வேதமே மர வடிம் எடுத்து வந்திருப்பதாக ஐதீகம்.

 

  • சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது.

 

 

திருவிழா: 

ஆடிப்பதினெட்டாம் பெருக்கன்று நீராடுவது சிறப்பு,

சித்ரா பவுர்ணமி, ரதசப்தமி

சித்திரையில் 13 நாள் தேர்திருவிழா. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆடி பதினெட்டு, ஆடி அமாவாசை, தை அமாவாசை

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்,

திருநணா, பவானி,- 638301.

ஈரோடு மாவட்டம்.

 

போன்:    

+91- 4256 – 230 192, +91- 98432 48588

 

அமைவிடம் :

ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், சேலத்தில் இருந்து 56 கி.மீ. தொலைவிலும் பவானி உள்ளது. சேலம், ஈரோட்டில் இருந்து பவானிக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. பவானிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம், ஈரோடு.

 

Share this:

Write a Reply or Comment

one × 4 =