June 08 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் கதித்த மலை

135. அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்    :      வெற்றி வேலாயுதன்

அம்மன்    :      தனி கோயிலில் வள்ளி, தெய்வானை

தீர்த்தம்    :      முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலை மீது உள்ளது.

ஊர்        :      கதித்த மலை

மாவட்டம் :      ஈரோடு

 

ஸ்தல வரலாறு :

கந்தன் மீது மிகுந்த பக்தி கொண்ட அகத்திய முனிவர், அவர் குடி கொண்ட தலங்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடன் நாரதரும், பிற தேவர்களும் செல்வது வழக்கம். அப்படி ஒருசமயம், கந்தனை தரிசிக்கச் செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தில் கந்தனுக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். மேலும், அதிக தாகம் எடுத்ததால், மிகுந்த சிரமத்துக்கு ஆளானார் அகத்தியர். தன்னை அச்சூழலில் இருந்து காக்குமாறும் முருகப் பெருமானை வேண்டினார்.

உடனே முருகப் பெருமான் அங்கு தோன்றி, தனது வேலை தரையில் குத்தி ஓர் ஊற்றை ஏற்படுத்தினார். அதிலிருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்திய முனிவர் மகிழ்ச்சி அடைந்து தனது பூஜைகளை முடித்தார்; தாகத்தையும் தீர்த்துக் கொண்டார். முருகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஊற்று இன்று வரை கைத்தமலை வேலாயுத சாமி கோயிலில் வற்றாமல் நீரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து தோன்றியதால் ‘ஊத்துக்குளி’ என்று அப்பகுதியே அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கு கோயில் கட்டப்பட்டது.

 

கோயில் சிறப்புகள் :

  • கொங்குநாட்டில் குன்றுதோறும் கோயில்  கொண்டுள்ளகுமரனின் ஆலயங்களில் கதித்தமலை தனிச்சிறப்பு கொண்டது.

 

  • வெண்ணெய் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கும் இவ்வூர், கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்ல படிகட்டுகள் மட்டுமல்லாது தார்ச்சாலை வழியும் அமைக்கப்பட்டுள்ளன.

 

  • இக்கோவில் மலையின் மீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சன்னதியில் முருகன் தனியாக காட்சிதருகிறார். வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

 

  • சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள் ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர் திருமணத்துக்கு முன்னர் இருக்கும் நிலை என்பதால், வள்ளியும் தெய்வானையும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

 

  • கதித்த என்பதற்கு எழுதல், நற்கதி பெறுதல், மிகுதல், கனமான, உயர்ந்த, கோபித்த என்று பொருள் கொள்ளலாம். முருகன் தனது பெற்றோரான சிவன் – பார்வதி தேவியிடம் கோபித்துக் கொண்டு இந்த மலைக்கு வந்ததால் இம்மலை கோபித்த மலை என்றும் கதித்த மலை என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • மயில் வடிவில் இருப்பதால் ’மயூரகிரி’ என்ற பெயரும் இம்மலைக்குக் கிட்டியது.

 

  • மயூரகிரி சித்தர் இங்கு சமாதி அடைந்துள்ளார்.

 

  • கதித்தமலை ‘கதிர்த்தமலை’ என்று சொல்லப்படுகிறது. கதிர்த்த என்ற சொல், ‘பிரகாசித்தல், ஒளிவிடுதல்’ என பொருள் தருகிறது.

 

  • பொதுவாக, மலைக் கோயில்களில், மலைக்கு கீழேதான் தேர் வலம் வருவது வழக்கம். ஆனால், இக்கோயிலில் மரச் சிற்பத்தான் செய்யப்பட்ட தேர், மலைமீது அமைந்துள்ள கோயிலைச் சுற்றி வலம் வருவது தனிச்சிறப்பு.

 

  • அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .

 

  • மலையின் வடசரிவில் சிவபெருமானின் காளை வாகனத் திருவடியும் கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் சுப்பராயர் சந்நிதி என்னும் புற்றுக்கோயிலும் உள்ளது.

 

  • வள்ளி- தெய்வானை சந்நிதிக்குச் செல்லும் வழியில் சுமார் 500 ஆண்டுகள் பழைமையான பாலை மரத்தின்அடியில் சுக்குமலையான் சந்நிதி உள்ளது.

 

  • அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

 

திருவிழா:

தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலின் தைப்பூசத் தேரோட்டம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 12 நாள் விழாவாகக் கொண்டாடப்படும் தைப்பூச விழாவில் தைப்பூசத்தன்று தேர்த் திருவிழா நடைபெறும். தமிழகத்தில் மலை மீது மரச் சிற்பங்களால் ஆன தேரோட்டம் நிகழ்வது ஊத்துக்குளி கதித்தமலையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை

மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில்,

கதித்த மலை,

ஊத்துக்குளி-638 751,

ஈரோடு மாவட்டம்.

 

போன்:    

+91- 4294-262 052-54

 

அமைவிடம் :

திருப்பூரில் இருந்து (15 கி.மீ)ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் பஸ்களில் சென்றால், கதித்த மலை முருகன் கோயிலை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

nine + eighteen =