March 07 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்

சிவன்மலை முருகன் கோயில் வரலாறு

 

மூலவர்         :     சுப்ரமணிய சுவாமி

உற்சவர்         :     வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர்

அம்மன்         :     வள்ளி, தெய்வானை

தல விருட்சம்   :     தொரட்டி மரம்

தீர்த்தம்         :     காசி தீர்த்தம்

புராண பெயர்    :     பட்டாலியூர்

ஊர்             :     சிவன்மலை, காங்கேயம்

மாவட்டம்       :     திருப்பூர்

 

ஸ்தல வரலாறு :

தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள் இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர புதல்வர்களாலும் பூலோக மக்களுக்கு மிக பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானிடம் முனிவர்களும், பக்தர்களும் முறையிட்டார்கள். அசுரர்களின் உலோகத்தலான கோட்டைகளை அழிக்க சிவபெருமான் பிரம்மாண்ட தேர் உருவாக்கி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு போரிடும் போது, வில்லாக இருந்து மேருமலையின் ஒரு பாகம் பூமியில் விழுந்தது. அதுவே சிவன்மலை என்று அழைக்கப்படுகிறது.

கொங்கு நாட்டில், குன்றுகளின் மேல் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு பெற்றது சிவன் மலை . அருணகிரி நாதரால் பாடல் பெற்றது; புராணங்கள், தமிழ் இலக்கியங்கள், சிவமலை குறவஞ்சி என பழங்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டின் உறுப்பு நாடுகள் 24ல், காங்கேய நாட்டின் தலைநகராக இருந்தது சிவன்மலை. கங்கையின் புதல்வர் முருகன், காங்கேயன் என்ற சிறப்பு பெற்றதாகவும், கங்கை குல வேளிருக்கு உரியதால் இப்பெயர் பெற்றது, கங்கர்கள் ஆண்டது என பல்வேறு வரலாறுகள் உள்ளது. காங்கேய நாடு கோயில்கள் நிறைந்த நாடு; இன்றும் பல ஆயிரம் ஆண்டு பழைமையான கோயில்கள் காங்கேயம் பகுதிகளில் காணப்படுகின்றன. சிவன் மலை குன்றாகவும், வனமாகவும் இருந்துள்ளது. பட்டாலியே குடியிருப்பாக இருந்துள்ளது. சிவன்மலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என குறிக்கப்படுகிறது. அடிவாரத்திலுள்ள பட்டாலி வெண்ணீஸ்வரர் கோயில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதமான சிற்பங்கள், 13 கல்வெட்டுகள்  காணப்படுகிறது.

 

சிவமலை குறவஞ்சியில் சிவன் மலை என பெயர் வந்ததற்கு, வள்ளி நாயகியை முருகன் கவந்து வந்த காரணத்தில், ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்- வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து , மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10-13ம் நூற்றாண்டில், மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பட்டாலி கல்வெட்டுக்களை 1920ம் ஆண்டே, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. 18 சித்தர்களின் சிறப்பு பெற்றவரும், சிவ வாக்கியம் என்ற நூலை இயற்றிய சிவஞானியும், சித்தருமாகிய சிவவாக்கியர்  அமைத்த கோயில் ஆகும். சிவ வாக்கியர், முருகனின் உபதேசத்தால், இக்கோயிலை அமைத்ததால், சிவமலை என பெயர் பெற்று, நாளடைவில், சிவன் மலை என பெயர் மருவியுள்ளது. பார்வதியின் பாதங்களில் உள்ள அணிகலன்களிலிருந்து தெறித்து விழுந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி, அவர்கள் வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரர்கள் தோன்றினர். இதனால், வீரமாபுரம் எனவும் பெயர் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.சிவமலை. சிவாசலம், சிவராத்திரி, சிவசயிலம், சிவமாமலை. சிவசைலம், சிவநாகம்,சிவகிரி எனவும், புலவர்கள்  தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என பலர் பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. திரிபுர  சம்ஹாரத்தின் போது, சிவபெருமான் வாசுகியைக்கணையாக வைத்து, மேருமலையை வில்லாக வளைத்த போது, மேரு மலையில் சிகரங்களில் ஒன்று காங்கேய நாட்டில் விழுந்தது  சிவமலை குன்று. கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்துள்ளது. வீதிகள் தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு; கலை வளரும் நாடு; சிவன் மலையில் சீருடன் தேரோட்டம் நாடு, செல்வம் சிறக்கும் நாடு என பழங்கால இலக்கிய பாடல்களில் குறிப்புள்ளது.முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என்றும் பழங்கால பாடல் குறிப்பிடப்படுகிறது. அதே போல், இங்கு, அரிய வகை கற்கள், நவ ரத்தின கற்கள் எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழங்காலத்தில், இங்கிருந்து நவ மணிகள் உற்பத்தி; மணிகளாக செய்யப்பட்டு, பெரு வழியில் சென்று, கப்பல்கள் மூலம்  ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது, கொடுமணல் ஆய்வு மூலம் தெரிந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்று பத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது. அருணகிரி நாதர் பட்டாலிக்கு வந்து மூன்று திருப்புகழ் பாடியுள்ளார். பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோயிலில் 17 கல்வெட்டுக்கள் உள்ளன. குலோத்துங்க சோழன், விக்கிர சோழன், வீரராஜேந்திர சோழன், அபிமான சோழ ராஜ ராஜ  சோழன் உள்ளிட்டோர் கல்வெட்டுக்கள் உள்ளன.சோழ அரசர்கள் கோவிலுக்கு அதிகளவு கொடை அளித்துள்ளனர். சிலைகள், மண்டபங்கள், விளக்கு வைக்க, சிவராத்திரி கொடை, கிணறு, தோட்டம் என பல குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கோயில் சிறப்புகள் :

  • அகத்திய முனிவரால் இந்த பகுதிக்கு வந்த முருகன் அகத்திய முனிவர், மெய்யான சன்மார்க்க நெறியை உபதேசிக்கும்படி முருகப் பெருமானிடம் வேண்டினார். அகத்தியரை சிவன்மலைக்கு அழைத்துச் சென்று இங்கு இருந்த அத்திமரத்தின் கீழ் உபதேசம் செய்து அந்த இடத்திலேயெ நிரந்தரமாக அமர்ந்தார் முருகப் பெருமான்.

 

  • பதினெண் சித்தர்களில் ஒருவரும், சிறந்த முற்போக்கு சிந்தனையாளனான பாடல்களை பாடியவருமான சிவவாக்கியர் இந்த மலையில் தங்கியிருந்து முருகப் பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அவர் நினைவாகவே இந்த மலை ‘சிவன் மலை’ என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுவதுண்டு.

 

  • அனைத்து நோய்களும், பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாகவும், அரிய வகை மூலிகை செடிகள் உள்ள காட்டை கடந்து செல்வதால் நோய்கள் தீர்வதாகவும், சித்தர்கள் பலர் தவமிருந்த மலை; இன்றும் பல சித்தர்கள் இம்மலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஐதீகம் உள்ளது.

 

  • இங்கு எழுந்தருளியுள்ள முருகனுக்கு, சிவ+அசலம் + பதி = சிவாசலபதி, தீராத காய்ச்சலுக்கு தீர்வு : மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார்.காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

 

  • நோய்க்கு மருந்து முருகனே என்றார் கௌதம மகரிஷி முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார் ‘சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்’ என்றார். கௌதமகரிஷி முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

 

  • 1717-ம் ஆண்டு முதல் முருகனின் மகிமையை அறிந்தார்கள் சிவன்மலை கிராமத்தில் முருகன் கோயில் இருப்பதை கேள்விப்பட்ட காங்கேய நாட்டு அரசர், காடையூர் காங்கேய மன்றாடியார், காங்கேயம் பல்லவநாயர் போன்ற தனவந்தர்கள் சிவன்மலை முருகனின் பக்தர்களாக இருந்ததால் முருகனுக்காக திருக்கோயிலுக்கு பல நன்கொடைகளை கொடுத்து திருப்பணிகளை நடத்தினார்கள்.

 

  • 1717-ம் ஆண்டு சர்க்கரை மன்றாடியார் வம்சத்தை சேர்ந்த ஒருவருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்தார். அந்த இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்தால் சிவன்மலையில் தேர் வருவதற்கு பாதை அமைத்து தருவதாக வேண்டினார். பக்தர்களை காண விரும்பிய முருகன் அந்த பக்தனின் நியாயமான பிராத்தனைக்கு செவி சாய்த்தார். அவர் கஷ்டங்கள் தீர்ந்தது. வேண்டிய படி முருகனின் தேர் வீதி உலா வர சிவன்மலையில் பாதை அமைத்தார் அந்த பக்தர்.

 

  • சிவன்மலை கோயில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. முன்னமே ஆண்டவன் உத்தரவு மூலம் சுவாமி உணர்த்துகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ  கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால், ஏற்கெனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்யப்பட்ட பொழுது, சால்பரிகள் பயன்பாடு குறைந்து, மின் மோட்டார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது, சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது, மொபட், பைக் என வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது; தண்ணீர் வைத்து பூஜை செய்த போது, சுனாமி ஏற்பட்டது, மணல் வைத்து பூஜை செய்த போது, மணல் விலை ஏறியது, மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் உருவாகி வளர்ந்தது. மஞ்சள், தங்கம், நெல் என பொருட்கள் வைத்து பூஜை செய்த போது, அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது என , ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடந்து வருகிறது.

 

  • அனும தீர்த்தம், அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், சக்தி தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தகங்கள் உள்ளதாகவும், ஆண்டவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த சடச்சி அம்மன் என்ற பெண், கங்கையின் சிறப்பு அறிந்து, கங்கை செல்ல வேண்டும் என வேண்டியுள்ளார். முருகன் அவருக்கு, காசி, கங்கை தீர்த்தத்தை உருவாக்கி, காசியை காட்டியதாகவும், இன்றும் நந்தவனமாக உள்ள பகுதியில் கங்கை, காசி தீர்த்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  • மூலவருக்கே முதல் மரியாதை அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு  முதல் பூஜை நடக்கும். இங்கு மூலவரான சுப்ரமணியருக்கே நடக்கிறது. இதற்கு, இங்கு எழுந்தருளியுள்ள விநாயகரே, முருகனை வழிபடுவதாக ஐதீகம் என்கின்றனர்.

 

  • கருவறையில், மூலவராக வள்ளியம்மை உடனமர் ஸ்ரீ அன்னதான மூர்த்தியாக எழுந்தருளி, வள்ளி மணாளன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். முருகனை நினைத்து வள்ளி இங்கு தவமிருந்து, அறச்சாலை அமைத்து பணி புரிந்ததாகவும், வள்ளியறச்சாலை, மருவி வள்ளியரச்சல் ஆனதாகவும், காங்கேய நாட்டில் ஒரு பகுதி வள்ளியறச்சாலையாக இருந்துள்ளது.வள்ளி, தெய்வானை சமேத, சுப்ரமணியர் திருமண கோலமும்,  வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதிகளும் உள்ளது.

 

  • தொரட்டி மரம், கொங்கு நாட்டு பகுதியில் பல கோயில்களில் தலவிருட்சமாக இறைவனோடு சேர்ந்து வணங்கப்படுகிறது. தொரட்டி என்ற பெயரே ஒரு வித்தியாசமாக உள்ளது. கிராமங்களில் மரங்களிலிருந்து காய், கனிகளைப் பறிக்க தொரட்டி என்ற ஒரு வகைக் குச்சியை பயன்படுத்துவார்கள். ஆனால், இதன் பெயரில் ஒரு மரம் இருப்பதும், அது கோயில் தலவிருட்சமாக அமைந்திருப்பதும் புதிய தகவல்தான். இந்த மரம் வறண்ட நிலப்பகுதியிலும், பாலைவனப்பகுதியிலும் வளரக்கூடியது. சுமார் 8 முதல் 15 அடி உயரம்வரை வளரக்கூடியது. தொரட்டி மரத்தை நிழல்தரக்கூடிய செங்கம் மரம் என்றும் கிராமப்புறங்களில் அழைப்பார்கள். இத்தகைய தொரட்டி மரம் கொங்கு நாட்டின் மிகவும் புகழ் பெற்ற காங்கயத்தில் உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தலவிருட்சமாகத் திகழ்கிறது. சிவகங்கை மாவட்டம் கொளிங்குன்றம் ஊரில் உள்ள கொடுங்கநாதர் கோயிலிலும், கோவை புதூர் கோட்டை தண்டு மாரியம்மன் கோயிலிலும், கோட்டைக்கரையம்மன் கோயிலிலும் இதுவே தலமரம்.கோயம்புத்தூர் கோட்டையிலே வேப்ப மரம், தொரட்டி மரத்தின் நிழலிலே வடக்கு நோக்கி தண்டு மாரியம்மன் காட்சி தருகிறார்.

 

திருவிழா: 

ஆண்டு தோறும் தைப்பூச தேர்த்திருவிழா 16 நாட்கள் சிறப்பாக நடந்து வருகிறது. அதோடு, தமிழ்வருட பிறப்பான சித்திரை கனி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், அடி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஐப்பசி கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை ஜோதி,  தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், மற்றும் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி என ஆண்டு முழுவதும் சிறப்பான திருவிழாக்கள் சிவன் மலையில் நடந்து வருகிறது.

திறக்கும் நேரம்:

காலை 5.30 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:  

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

சிவன்மலை,

காங்கேயம் தாலுகா.

திருப்பூர் மாவட்டம்.

போன்:    

+91 4257- 220680, 220630

அமைவிடம் :

திருப்பூரிலிருந்து 18 கி.மீ தொலைவில் காங்கேயம் செல்லும் வழியில் சிவன்மலை உள்ளது. காங்கேயத்திலிருந்து 4 கி.மீ. துõரம். அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு வாகனங்களில் செல்லும் ரோடு வசதி உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

four × 3 =