June 03 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருசெம்பொன் செய் (திருநாங்கூர்)

  1. திருச்செம்பொன் செய் கோயில் வரலாறு

 

மூலவர்         :      பேரருளாளன்

உற்சவர்       :      செம்பொன்னரங்கன், ஹேரம்பர்

தாயார்          :      அல்லிமாமலர் நாச்சியார்

தீர்த்தம்         :      நித்ய புஷ்கரிணி, கனக தீர்த்தம்

ஊர்                  :      திருசெம்பொன் செய் (திருநாங்கூர்)

மாவட்டம்    :      மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு :

ராவணனுடன் யுத்தம் முடிந்தபின், ராமபிரான் அயோத்தி திரும்புகிறார். அந்த சமயத்தில் இத்தலத்தில் அமைந்துள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனைக் கொன்றதால், ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது, அதுகுறித்து த்ருடநேத்ர முனிவரிடம் ஆலோசனை நடத்தினார். முனிவரும் ராமபிரானுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார். அதன்படி தங்கத்தால் பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்யப்பட்டது. அந்த பசுவுக்குள் 4 நாட்கள் அமர்ந்து ராமபிரான் தவம் மேற்கொண்டார். ஐந்தாம் நாள் அந்த சிலை, ஓர் அந்தணருக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் ராமபிரானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அந்த அந்தணர், பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால், ‘செம்பொன் செய் கோயில்’ என்ற பெயர் கிட்டியது.

கனக விமானத்தின் கீழ் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் பெருமாள், தன் கோயிலை தானே கட்ட உதவிபுரிந்துள்ளார். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால், ‘அருளாளர்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் எப்போதும் பக்தர்களைக் காத்து அவர்களுடனேயே இருப்பதால் ‘பேரருளாளர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் அல்லிமாமலர் நாச்சியார், பூதேவியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

 

கோயில் சிறப்புகள் :

  • 108 வைணவ திவ்ய தேச தலங்களில் மயிலாடுதுறை மாவட்டம் திருசெம்பொன் செய் கோயில் 31-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • பிரும்மஹத்தி தோஷத்தில் இருந்து சிவபெருமான் விடுபட, ஏகாதச ருத்ர அச்வமேத யாகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி யாகத்தின் பூர்ணாஹூதி சமயத்தில் திருமால் எழுந்தருளி, சிவபெருமானுக்கு சேவை சாதித்தார்.

 

  • ருத்ரனின் பிரார்த்தனைப்படி திருமால் 11 ரூபங்களில் அவருடன் நித்ய வாசம் செய்துகொண்டு அருள்பாலிக்கிறார். இதை முன்னிட்டு தை மாத அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்ய தேச எம்பெருமான்கள் திருமணிக்கூடத்தில் இருந்து தொடங்கி 11 கருட வாகனத்தில் எழுந்தருள்வது வழக்கம். திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களும், ருத்ரன் பூஜிப்பதற்காக ஏற்பட்டவை.

 

  • 108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம்.

 

  • பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் “பேரருளாளன்’ ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

 

  • காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன் என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை “ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார்.

 

திருவிழா: 

பெருமாளின் நட்சத்திரமான ஐப்பசி சுவாதியில் பிரமோற்ஸவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவைக்கு இந்த பெருமாளும் எழுந்தருளுகிறார்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10மணி வரை,

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில்,

செம்பொன்செய் கோயில்,

திருநாங்கூர்- 609 106 .

மயிலாடுதுறை

 

போன்:    

+91- 4364-236 172

 

அமைவிடம் :

சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள அண்ணன்கோவில் ஸ்டாப்பில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தூரம் ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம்.

 

 

Share this:

Write a Reply or Comment

eleven − five =