September 28 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கானூர்

  1. அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்

உற்சவர்        :     கரும்பேஸ்வரர்

அம்மன்         :     சிவயோகநாயகி, சவுந்தரநாயகி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     வேத தீர்த்தம், கொள்ளிடம்

புராண பெயர்    :     திருக்கானூர்பட்டி, மணல்மேடு

ஊர்             :     திருக்கானூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

திருக்கானூர் என்ற மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இறைவன் கரும்பீஸ்வரர். அம்மன் சவுந்தரநாயகி அம்பாள். மூலஸ்தானத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு கரும்பீஸ்வரர், செம்மேனிநாதர் தேஜோமயர், இஷுவனேஸ்வரர், செம்பேனியப்பர், முளைநாதர் ஆகிய பெயர்களும் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் வேத தீர்த்தம் ஆகும். தலவிருட்சம் வில்வ மரம்.

கோவிலின் அருகில் உள்ள கொள்ளிடம் நதி பெருக்கெடுத்து ஓடியதால் இந்த கோவிலை மணல்மூடி மக்கள் கண்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்தநிலையில், மாடு மேய்க்கும் சிறுவர்கள் காலில் கோவில் கலசம் தென்பட்டதை தொடர்ந்து இந்த இடத்தை தோண்டி பார்க்க கோவில் முழுமையும் வெளியே கொண்டு வரப்பட்டது.

ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கி தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாக தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னி பிழம்பாக காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் செம்மேனிநாதர் ஆனார். அம்மன் சிவயோகநாயகி ஆனார். கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.

ஜமதக்கினி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் பரசுராமர். ஒரு முறை இவர் இல்லாதபோது கார்த்தவீர்யார்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனு பசுவை பலவந்தமாக கவர்ந்து சென்றார்.  திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்சுனனை கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 சத்திரியர்களையும் கொன்றார். இதனால் இவருக்கு “சத்திரிய தோஷம்’ ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப்பெற்றார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் என்ற ஊரில் உள்ள கோயில் செம்மேனிநாதர் திருக்கோயில். இந்தக் கோயிலில் செம்மேனிநாதர் (கரும்பேஸ்வரர்) மூலவராக காட்சி தருகிறார். கரும்பேஸ்வரர் உற்சவராக திகழ்கிறார். சிவயோகநாயகி, சவுந்தரநாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். வில்வம் மரமே கோயிலின் தல விருட்சமாக அமைந்துள்ளது.

 

  • அம்பிகையின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அக்னி பிழம்பாக காட்சி தந்தார். இதன் காரணமாக இத்தல இறைவன் செம்மேனிநாதர் ஆனார். அம்மன் சிவயோகநாயகி ஆனார். கணவனும், மனைவியும் இணைந்து இந்தக் கோயிலில் வந்து வழிபட்டால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை.

 

  • பங்குனி மாதத்தில் வரும் ஏப்ரல் 2, 3, மற்றும் 4 ஆகிய தேதிகளில் இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்மனின் விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது.

 

  • ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் இத்தல இறைவனுக்கு சூரிய பூஜை கொண்டாடப்படுகிறது. ஆவணி மூலம், தை பௌர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மணலில் மூடப்பட்டிருந்த கோயிலானது வெளிக் கொண்டுவரப்பட்டது.

 

  • ஒரு முறை கரிகால் சோழனின் தாய் எதிரிகளுக்கு பயந்து தன் மகனுடன் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தாள். சோழநாட்டிற்கு மன்னன் இல்லாத காரணத்தினால் பட்டத்துயானை அரசாட்சிக்குரியவரை தேடி வந்தது. அப்போது திருக்கானூரில் விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையிட்டு, தன் பிடரியில் அவனை ஏற்றிக்கொண்டு உறையூர் சென்றது. சோழமன்னன் ஆனான் கரிகாலன்.

 

  • பண்டைய சோழ மன்னன் கரிகாலன் ஊர் இந்த கோவில் அமைந்துள்ள ஊர் என்றும், யானை மாலையிட்டு கரிகாற் சோழனை அழைத்துச் சென்றது இந்த ஊரில் இருந்துதான் என்றும் ஒரு செவிவழி செய்தி இந்த ஊரை பற்றி தெரிவிக்கிறது. மேலும் இந்த கோவிலுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் நிலங்களை வழங்கி உள்ளதாகவும் கல்வெட்டு செய்தி கூறுகிறது.

 

  • கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நாகர், மகாவிஷ்ணு, ஐயனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர்.

 

  • விமானம் ஏகதளம் – உருண்டை வடிவமானது

 

  • அம்பாள் சாளக்ராம விக்ரஹம்.

 

  • திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றுள்ள கோயில்.

 

திருவிழா: 

ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவனுக்கு சூரிய பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது

 

திறக்கும் நேரம்:

காலை 10 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 3.30 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில்,

திருக்கானூர், விஷ்ணம்பேட்டை – 613 105

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91-4362-320 067, +91- 93450 09344.

 

அமைவிடம்:

திருவையாறிலிருந்து (25 கி.மீ.) திருக்காட்டுப்பள்ளி சென்று அங்கிருந்து வடக்கே 5 கி.மீ. தூரத்திலுள்ள விஷ்ணம்பேட்டையில் கோயில் உள்ளது. ஆட்டோ வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

3 × 3 =