November 04 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முறப்பநாடு

  1. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கைலாசநாதர்

அம்மன்         :     சிவகாமி

தீர்த்தம்         :     தெட்சிணகங்கை

புராண பெயர்    :     கோவில்பத்து

ஊர்             :     முறப்பநாடு

மாவட்டம்       :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு:

உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஐந்தாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் முறப்பநாடு ஆகும். நவ கைலாயங்களை நவக்கிரக ஸ்தலமாக கூறுவது மிகவும் தவறு.

 

சோழ மன்னன் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையை கண்டு கவலை கொண்டான் மன்னன். தனது மகளுக்கு அமைந்துள்ள குதிரை முகம் மாற வேண்டி பல்வேறு திருக்கோவில்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கி தவம் இருந்தான். சிவபெருமான் அந்த மன்னன் முன்பு தோன்றி, முறப்பநாடு செல். அங்குள்ள தாமிரபரணி நதிக்கரையில் நீராடு என்று ஆசி வழங்கினார். சிவபெருமானின் திருவுளப்படி அந்த மன்னன் தனது மகளோடு இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்த கட்டத்தில் நீராடினான். என்ன ஆச்சரியம்! அந்த மன்னனின் மகள் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிகவும் அழகாக தோன்றினாள். மன்னன் மகளின் குதிரை முகத்தை இந்த கோவிலில் உள்ள நந்தி ஏற்றுக்கொண்டது. மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக்கொண்டதால் இங்குள்ள நந்தி குதிரை முகத்துடன் காட்சியளிப்பதை காணலாம். உடனே மன்னன் மனம் மகிழ்ந்து சிவபெருமானுக்கு கோவில் கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது.

பதினோராம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசு சிறப்புற்று இருந்த காலம். அப்போது பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு பின் அச்சுத தேவராயர் ஆட்சியில், ராமராயன் என்ற சிற்றரசர் இருந்து வந்தார். அவருடைய தம்பி விட்டலராயன், தமிழக பிரதிநிதியாக ஆட்சி புரிந்தார். தன்னை எதிர்த்த சிற்றரசர்களை வென்று தெற்கு நோக்கி தனது படைகளுடன் வந்தார். பேரரசருக்கு கப்பம் கட்ட மறுத்த திருவாங்கூர் மகாராஜா மீது படையெடுக்க விட்டலாயப் பேரரசர் முறப்பநாட்டில் முகாமிட்டு இருந்தார். அவர் ஒரு வைணவராக இருந்தாலும் கூட, ஸ்ரீகயிலாசநாதர் கோவிலுக்கு வந்து வழிபட்டார் என கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இயற்கை எழில் சூழ்ந்த வனப்புடன் பசுமை கொஞ்சும் எழில் கண்ணுக்கு விருந்தாக வாழைத்தோட்டங்களும், வயல்வெளிகளும் நிறைந்த இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

 

  • வற்றாத புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு காசியில் காணப்படுவது போல வடக்கிலிருந்து தெற்கு முகமாக நீர் வழிப்போக்கைக் கொண்டுள்ளது. அதனால் இந்த இடத்திற்கு தட்சிண கங்கை என்று பெயர். இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

 

  • காசிக் கட்டம், சபரி தீர்த்தம் எனப்படும் ஆற்றின் இப்பகுதியில் ஆடி, தை அமாவாசை, மாதந்தோறும் கடைசி வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் நீராடி இந்நதிக் கரையில் உள்ள சிவகாமி உடனுறை கைலாசநாதரை வழிபட்டால் வாழ்வில் பேரின்பம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

  • இத்திருத்தலத்தில் சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, குருவாக, தென்முக கடவுளாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

 

  • கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி கைலாசநாதர், லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார்.

 

  • தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்திய படியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும், நின்ற கோலத்தில், புன்சிரிப்புடன் காட்சித்தருகிறாள்.

 

  • இங்குச் சுவாமிக்கு எதிராக வீற்றிருக்கும் நந்தியெம்பெருமான், வழக்கத்திற்கு மாறாகக் குதிரை முகத்துடன் காட்சித் தருகிறார்.

 

  • இங்கு பைரவர் சன்னிதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். வழக்கம்போல் நாயுடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீரபைரவர் என்றும் அழைக் கின்றனர்..

 

  • அது மட்டுமல்லாது புராண சிறப்பு பெற்ற தசாவதார தீர்த்தக்கட்டம் இங்கு உள்ளது. அதாவது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இந்தக் கோவிலில் உள்ளது.

 

  • இது இந்தியாவிலேயே மிக சிறப்பு மிக்க இடமாகும். பருக்கை கற்கள் நிரம்பிய மேட்டு நிலத்தை ‘முரம்பு’ என்று கூறுவார்கள். முரம்பு உடைய நிலத்தை கொண்டதனால் இந்த ஊர் முறப்பநாடு என்று பெயர் பெற்றதாக பெயர்க்காரணம் கூறப்படுகிறது.

 

  • முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபதுமனின் வழியில் வந்த அசுரன் ஒருவன், இந்தப் பகுதியில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடுமையான தொல்லைகளைக் கொடுத்து வந்தான். அந்த துன்பத்தைப் பொறுக்க முடியாத முனிவர்கள் அனைவரும் கயிலாயத்தில் வசித்து வரும் ஈசனிடம் முறைப்படி முறையிட்டனர். சிவபெருமான், உள்ளம் உருகி முனிவர்களுக்கு அருள்பாலித்தார். ஈசனை முறைப்படி முறையிட்ட காரணத்தால் இத்தலம் ‘முறைப்படு நாடு’ என்று பெயர் பெற்றது. அதுவே பின்னாளில் மருவி ‘முறப்பநாடு’ என்றானது.

 

  • இங்குள்ள கோவிலானது தாமிர பரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி கயிலாசநாதராகவும், அம்பாள் சிவகாமியாகவும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். கோவிலின் தென்கிழக்கில் சூரிய பகவானும், வடக்கு நோக்கி அதிகார நந்தியும் அமைந்துள்ளனர். கோவில் வெளிச்சுற்றில் சுரதேவர் மற்றும் அஷ்டலட்சுமி களும், 63 நாயன்மார்களும் வீற்றிருக்கின்றனர்.

 

  • கருவறை சுவர் அருகே பஞ்சலிங்கமும், தென்மேற்கு மூலையில் கன்னி விநாயகரும் உள்ளனர். வடமேற்கில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானையோடு காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் சனீஸ்வரர், சண்டேஸ்வரர் மற்றும் காலபைரவர் சிலை உள்ளது. கயிலாசநாதர் கருவறையின் மேல் விமானம் உள்ளது. இக்கோவிலானது நான்கு மண்டபங்களை கொண்டு உள்ளது. முதலில் உள்ள பந்தல் மண்டபத்தில் பத்து தூண்கள் உள்ளது. பின்னர் ஊஞ்சல் மண்டபம், மணி மண்டபம் என்ற அமைப்புகளை கொண்டுள்ளது.

 

 

திருவிழா: 

மாசி மாத சிவராத்திரி, மாதாந்திர பிரதோஷ வழிபாடுகள், மார்கழி திருவாதிரை, கார்த்திகை சோமவார வழிபாடு  ஆகியவை நடைபெறுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,

முறப்பநாடு -627 254,

திருநெல்வேலி மாவட்டம்

 

போன்:    

+91- 98424 04554.

 

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 12 கி. மீ தொலைவில் திருநெல்வேலி – தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது முறப்பநாடு. இங்குச் செல்லத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்துகள்  மற்றும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் ஆகியவை அடிக்கடி உள்ளன. முறப்பநாடு பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் சுமார் 2.5 கி.மீ தொலைவில் உள்ள இந்தக் கோவிலை வாடகை ஊர்திகள் மூலம் சென்று அடையலாம்.

 

Share this:

Write a Reply or Comment

2 + 19 =