February 11 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மயிலாடுதுறை

  1. அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     மயூரநாதர் ,வள்ளலார்

அம்மன்         :     அபயாம்பிகை, அஞ்சல்நாயகி

தல விருட்சம்   :     மாமரம், வன்னி

தீர்த்தம்         :     இடபம், பிரம்ம, அகத்திய தீர்த்தம், காவேரி, ரிஷப

புராண பெயர்    :     மாயூரம், திருமயிலாடுதுறை

ஊர்            :     மயிலாடுதுறை

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில், இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்துகொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்துவிடுகிறார். காவிரிக் கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு பார்வதிக்கு சிவன் சாப விமோசனமும் தந்துவிடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை மயிலாடுதுறை ஊரில் காவிரி நதியின் தென்புறத்தில் வெகுகாலம் தவம் இருக்கிறாள். தவத்தை மெச்சிய சிவன், ஆண் மயில் உருவெடுத்து பெண் மயிலான பார்வதியுடன் ஆடி, பார்வதிக்கு சாப விமோசனம் அருளினார். சிவனும், பார்வதியும் மயில் உருக்கொண்டு ஆடிய காரணத்தால் மயிலாடிய காவிரித் துறை என்று இத்தலம் பெயர் பெற்றது.

ஒருமுறை கன்வ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும்போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கன்வ முனிவரை வணங்கி, தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற, தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற, மூவரும் அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் துலா கட்டத்தில் நீராடி தங்கள் மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக்கொள்கிறார்கள் என்று புராணம் கூறுகிறது. துலா மாதத்தில் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர் என்று தல புராணம் கூறுகிறது. இத்தகைய தலபுராண சிறப்பு பெற்ற மயிலாடுதுறை சென்று ஐப்பசி மாதத்தில் (துலா மாதம்) காவிரியில் நீராடி இறைவன் மயூரநாதரையும் அம்பிகை அபயாம்பிகையையும் வழிபட நாம் செய்த பாவங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும் என்று கூறப்படுகிறது. ஆகையால், துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் முடவன் முழுக்கு என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலின் சிறப்பைப் பற்றி கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகிவிட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. முடவனுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கிவைத்ததால் இந்நாளை, முடவன் முழுக்கு நாள் என்கின்றனர்.

துலா மாதத்தின் கடைமுக நாளான கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் மாயூரம் நோக்கி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் 30-ம் நாள் நீராடல் முடிந்துவிட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில், கார்த்திகை முதல் நாளன்று அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும்.

 

  • மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.

 

  • பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது.

 

  • அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும்.

 

  • தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால், “அபயாம்பிகை’ என்று அம்பாள் அழைக்கப்படுகிறாள். இவள் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள். ஆடிப்பூர அம்பாள், வீரசக்தி வடிவமாக தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஆடிப்பூரத்தன்றும், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் காவிரிக்கரையில் எழுந்தருள்கிறாள்.

 

  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

 

  • இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படும். இத்தல விநாயகர் அகத்திய விநாயகர் எனப்படுகிறார்.

 

  • இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

 

  • இங்கு நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் அருள்புரிகிறார்.

 

  • இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது. இங்கு சுவாமி லிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள்.

 

  • இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட்கோபுரம் மூன்று நிலைகளையுடையது.

 

  • கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார்.

 

  • துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது.

 

  • இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர்.

 

  • பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார்.

 

  • நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் பொருட்டு அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே சன்னிதி உள்ளது. தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், அதுமட்டுமன்றி “அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்” என்ற வரத்தையும் அவர்களுக்கு ஈசன் அருளினார்.

 

  • மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

 

  • இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

 

  • குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர்.

 

  • வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.

 

  • மாயூரநாதர் சன்னிதிக்குத் தென்புறத்தில் கருவறையை ஒட்டி, குதம்பைச் சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளது.  சமாதி மீது சந்தன  விநாயகர் எழுந்தருள, சிறிய ஆலயமாக அமைந்துள்ளது.

 

  • இத்தலத்தின் தனிச்சிறப்பு ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா நீராடல் மற்றும் கார்த்திகை முதல்நாளின் முடவன் முழுக்கு ஆகும்.

 

  • அன்னை பார்வதி மயில் வடிவில் வழிபட்ட திருத்தலம், இறைவன் ஆண் மயிலாகி கௌரிதாண்டவம் ஆடிய தலம், துலா நீராடல் மூலம் பாவம் நீக்கும் தலம், மற்றும் திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள் வழிபட்ட ஆலயம்,  நந்திதேவர் தன் துணைவியோடு திருமணக்கோலத்தில் காட்சி தரும் அரிய தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது  மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில்.

 

  • பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னதி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை, “அகத்திய சந்தன விநாயகர்’ என்றும் அழைக்கிறார்கள்.

 

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார் ஆகியோரால் பாடல் பெற்ற கோயில் இது.

 

  • மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக மயிலாடுதுறை விளங்குகிறது. இந்த ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்தும் தலா ஒன்றரை மணி நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளன. அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

திருவிழா: 

வைகாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் துலா ஸ்நானம் விசேஷம், ஆடி கடைசி வெள்ளியில் லட்சதீபம்.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில்,

மயிலாடுதுறை – 609 001.

மயிலாடுதுறை  மாவட்டம்.

 

போன்:    

+91- 4364 -222 345, 223 779, 93451 49412 ,223 207

 

அமைவிடம்:

மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் 2 கி.மீ., ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

19 − 19 =