February 23 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… பெருவயல்

பெருவயல் ரணபலி முருகன் கோயில் வரலாறு

 

மூலவர்         :     சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்)

உற்சவர்         :     சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை

அம்மன்         :     வள்ளி, தெய்வானை

தல விருட்சம்   :     மகிழம் மரம்

தீர்த்தம்         :     சரவணப்பொய்கை

ஊர்             :     பெருவயல்

மாவட்டம்       :     ராமநாதபுரம்

 

ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.

 

ஸ்தல வரலாறு :

ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியர், சாத்தப்பன் என்கிற காத்த  வீரதளவா வயிரவன் சேர்வை.

முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை  வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணா முனை என்ற இடத்தில் மேலே  கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி – தெய்வானை சமேதராக சத்ரு  சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு! என்று கூறினார்.

இதேபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன்  கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள்.

 

பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலைகளையும் வேலையும் எடுத்து வந்தார்.

விஷயம் அறிந்த மன்னர், தன் அரண்மனையில் ராமலிங்க விலாசம்  என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல்  ஊரணிக்கரையில் முருகனுக்கு கோயில் அமைக்க நிலங்களையும் கொடுத்து உதவினார்.

அதன்பின்னர் கோயிலிற்குப் பணிகள் விரைவாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டின் அடிப்படையில் பெருவயல் கோயிலிலும் பூஜைகளும், விழாக்களும்  நடைபெறுகின்றன.

வயிரவன் சேர்வை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல்  தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே  அழைக்கப்படுகிறார்.

 

கோயில் சிறப்புகள் :

  • பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நன்மைகளும் அருள்வதால், ரணபலி முருகன்’ என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான பெயராகும்.

 

  • முருகன் சிலையோடு சேர்த்து ஒரு வேலும் கிடைத்துள்ளது. கடலில் கண்டெடுக்கப்பட்ட வேலில் முருகன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வேலிலும் முருகன் உருவம் இருக்காது.

 

  • இத்தலத்துக்கு வந்த பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.கிருபானந்த வாரியார் அவர்கள், இங்குள்ள முருகனின் திரு உருவம் பொறிக்கப்பட்ட வேல் போல் எங்கும் கண்டதில்லை என இத்தலத்தின் சிறப்பை பற்றி கூறியதை இங்கு அவரது புகைப்படத்துடன் செய்தியாக வைத்துள்ளார்கள்.

 

  • இந்த வேல் இராமநாதபுரம் அரண்மனையிலேயே வைத்து பாதுகாக்கப்படும் வருடம் ஒரு முறை நடக்கும் மாசித்திருவிழா 10 நாட்கள் மட்டுமே இந்த வேலை நாம் கோவிலில் பார்க்கலாம் மற்ற நேரத்தில் பார்க்க முடியாது.

 

  • திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியையும், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியையும் ஒரே தலத்தில் தரிசித்து, அந்த இரு தலங்களுக்கும் சென்று வந்த புண்ணிய பலனை ஒருசேரப் பெற பெருவயல் ரண பலி முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும்.  ராமநாதபுரத்தில் பெரிய வயல்கள் சூழ்ந்த கிராமமாக இவ்வூர் திகழ்வதால் பெருவயல் என்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இவ்வூரில் மிகப் பெரிய  நெற்களஞ்சியம் இருந்துள்ளது.

 

  • ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய கோயில். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகளைக் காணலாம். ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும், அதற்கு எதிரேயுள்ள இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான காட்சி. காலசந்தி மற்றும் சாயரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது

 

  • இங்கு முருகன் ராகு கேதுக்களுடன் தனியாக காட்சி தருகிறார் இவரை வழிபட்டால் ராகுதோஷம் நீக்குவார் என்பது நம்பிக்கை.

 

  • ஜெயங்கொண்ட விநாயகரை தரிசித்துவிட்டு பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்த மண்டபம் கடந்தால் கருவறை. உள்ளே வள்ளி – தேவசேனா சமேதராக ரணபலி முருகன் என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை பொங்கும் முகத்துடன் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டாலே கிடைக்கிறதாம்.

 

திருவிழா: 

தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இக்கோயிலில் முருகனுக்குரிய முக்கிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பதினாரு நாள் நடைபெறும் மாசிமாத பிரம்மோற்சவத்தில் 7 -ம் நாள் திருச்செந்தூரைப் போல் சண்முகர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மூன்று காலங்களில் எழுந்தருள்வார். இது இறைவனின் ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய செயல்களைக் குறிக்கும். 10 -ம் நாள் தேரோட்டமும், 11 -ம் நாள் கோயில் தீர்த்தமான சரவண பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறும்.

ஏழுநாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழாவில் 6 -ம் நாள் பிரசித்தி பெற்ற சூரசம்ஹாரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். அப்போது, கடலில் கண்டெடுக்கப்பட்ட அரிய சத்ரு சம்ஹார வேலைக் கொண்டு சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் அற்புதக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைவார்கள்.

 

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) திருக்கோயில் பெருவயல்-623513,

தேவிபட்டினம்

இராமநாதபுரம் மாவட்டம்

 

போன்:    

+91 9500847826

 

அமைவிடம் :

இராமநாதபுரம் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், தேவிப்பட்டினம் செல்லும் வழியில், பெருவயல் விலக்கு எனற இடத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும்.

அங்கிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் பெருவயல் கிராமத்தில் ரண பலி முருகன் ஆலயம் உள்ளது. அடிக்கடி பஸ் வசதி இல்லாததால் இராமநாதபுரத்தில் இருந்து ஆட்டோவில் செல்வதே சிறப்பு.

 

Share this:

Write a Reply or Comment

three + 8 =