May 05 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநாங்கூர்

  1. அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     மதங்கீஸ்வரர்

அம்மன்         :     மாதங்கீஸ்வரி

தல விருட்சம்   :     வன்னி

தீர்த்தம்         :     மதங்க தீர்த்தம்

புராண பெயர்    :     மதங்காஸ்ரமம்

ஊர்             :     திருநாங்கூர்

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

பிரளய காலத்தில் உலகமெங்கும் தண்ணீர் மயமாய் காட்சி தந்தது. அந்த சமயம் பிரபஞ்ச சிருஷ்டிக்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அதில் பிரம்மா, சிவனை மதங்க (யானை வடிவில்) ரூபமாய் தியானம் செய்தார். அதே நேரத்தில் பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க முனிவர், பிரம்மதேவனின் ஆணையால், சிவபெருமான் குறித்து தவம் செய்ய பூலோகம் நோக்கி புறப்பட்டார். உலகம் தண்ணீர் மயமாக இருந்ததால் அவருக்கு பூமி தென்படவில்லை. எனவே ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த மதங்க முனிவர், நாரதரிடம் தவம் செய்வதற்கு உரிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார். மதங்கரிடம் நாரத முனிவர், “பூமியில் சுவேதவனம் (திருவெண்காடு) என்று ஒரு இடம் உள்ளது. அங்கு பிரம்மதேவர் மகா பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுவார். அத்தலம் சிவ சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால், அந்தத் தலம் மட்டும் அழியாமல் இருக்கும். அங்கு புரச மரங்கள் அடர்ந்து இருக்கும். எனவே அப்பகுதியை ‘பலாச வனம்’ என்பர். அதன் அருகே சென்று தவம் செய்து சித்தி பெறுங்கள்” என்றார்.

 

நாரதர் சொன்னபடியே இந்த தலத்திற்கு வந்த மதங்க முனிவர் அங்கு தவம் செய்யத் தொடங்கினார். அவர் தவத்திற்கு இடையூறு விளைவிக்க, மன்மதனும், மோகினி உருவில் மகாவிஷ்ணுவும் வந்தனர். தனது தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன்மதனை “சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் நீ அழிவாய்” என சபித்தார் முனிவர். பதறிப்போன மன்மதன், சாப விமோசனம் வேண்டினான். உடனே மதங்கர், “நீ கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வனாய் பிறந்து சரீரம் பெறுவாய்” என அருளினார்.

மோகினியை முனிவர் சபிக்க முற்பட்டபோது, பகவான் மகாவிஷ்ணு, மதங்க முனிவருக்கு தரிசனம் அளித்தார். “மதங்கரே! உன் தவத்தை சோதனை செய்து பின், உமக்கு யோக சாஸ்திரம் அருளவே இங்கு வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்?” என்றார் மகாவிஷ்ணு. அதற்கு முனிவர் “தாங்கள் மோகினியாகவே தரிசனம் தந்து கொண்டு, எப்போதும் இவ்விடத்திலேயே தங்கியருள வேண்டும்” என வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.

மதங்க முனிவர் தியானத்தில் இருந்தபோது பரமசிவன் அவருக்கு காட்சி தந்து “என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார். மதங்கர், “நான் தவம் செய்த இந்த இடத்தில், யார் ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும், வசித்தாலும், பூஜித்தாலும் அவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும். நீங்கள் ‘மதங்கேசர்’ என்ற பெயர் கொண்டு லிங்க மூர்த்தியாய் இங்கு காட்சி தர வேண்டும்” என வேண்டிக் கொண்டார். மதங்க முனிவர் தவம் செய்த இடம், திருவெண்காட்டில் இருந்து வடமேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூரின் ஒரு பகுதியாகும். மதங்க முனிவர் வேண்டியபடி சிவபெருமான் மதங்கேசுவரர் என்ற திருநாமத்தில், ராஜமதங்கீசுவரி என்ற திருநாமம் கொண்ட தேவியுடனும் மதங்கருக்கு காட்சி தந்தார்.

 

சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் ஒரே திருத்தலத்தில் தோன்றி அருளிய திருத்தலம் திருநாங்கூர். அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அன்னை திருக்கடையூர் அபிராமியை ஆதிபராசக்தியின் பல்வேறு வடிவங்களாய் போற்றித் துதிக்கிறது. அபிராமி அந்தாதியில், ‘மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே’ என்பார் அபிராமிபட்டர். சித்திமதி-மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மதங்க கன்னிகைகளில் மூத்தவளும் பேரழகியுமானவள் அன்னை மாதங்கி. அவளது பச்சைநிறம் இந்த மண்ணையே களிக்கச் செய்ததாக அபிராமிபட்டர் போற்றுகிறார். இந்த மாதங்கியை சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி என்றும் அழைப்பார்கள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீகரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் என அள்ளித்தருபவள் ராஜமாதங்கி. இந்த ராஜமாதங்கி அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

 

  • இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஏகதளவிமானம் எனப்படும்.

 

  • இத்தல விநாயகர் வலஞ்சுழி மாதங்க விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

 

  • பிரகாரத்தில் “ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்’ தனிச்சன்னதியில் 8 கைகளில் ஆயுதங்கள் ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். ஊஞ்சலில் ஆடும்போது இவளது தரிசனம் பெறுவது விசேஷம். இவளே விழாக் காலங்களிலும் உலா வருகிறாள்.

 

  • பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர்.

 

  • கோஷ்டத்தில் “யோக பிரம்மா’ அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் மதங்க முனிவருக்கு சன்னதி இருக்கிறது.

 

  • இவ்வூரில் 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இதில் 9 கோயில்கள் மட்டும் இருக்கிறது. மகா விஷ்ணுவிற்கும் 11 கோயில்கள் இருக்கிறது. இந்த கோயில்கள் அனைத்தும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தலத்தில் 9 சிவன், 11 மகாவிஷ்ணு கோயில்கள்  அமைந்த சிறப்பான தலம் இது.

 

  • இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘மதங்கீசுவரர்.’ இறைவி பெயர் ‘ராஜமதங்கீசுவரி.’ கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் முன் முகப்பை தாண்டியதும், விஸ்தாரமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் வலதுபுறம் அம்பாளுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

 

  • இறைவன் மதங்கீசுவரர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

 

  • இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

 

  • பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்

 

  • இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சமாக, வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்கள் உள்ளன. இவை ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் உள்ளன.

 

  • காளியின் ஆலயத்தை அடுத்து மதங்க மகரிஷியின் சன்னிதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் வலஞ்சுழி மதங்க விநாயகர், பிரசன்ன சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் மோகினி உருவில் (பெண் உருவில்) நாராயணப் பெருமாள் நாராயணி என்ற பெயரில் அருள்பாலிக்கும் சன்னிதி உள்ளது.

 

  • தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீசுவரர் சன்னிதி உள்ளது.

 

  • வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும், மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி ‘சுவேத நந்தி’ எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி ‘மதங்க நந்தி’ எனவும் அழைக்கப்படுகிறது.

 

  • மகாவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் கோவில் கொண்ட பதினொரு திருத்தலங்கள் திருநாங்கூரில் திவ்விய தேசங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் ‘11கருடசேவை’ திருவிழா சிறப்பாக நடக்கும். அதுபோல இந்த சிவாலயங்களின் சார்பாக ‘பன்னிரு ரிஷபாரூட சேவை’ திருவிழா சித்ரா பவுர்ணமி நாளில் அக்காலத்தில் இங்கு நடந்துள்ளது.

 

  • தற்போது வைகாசி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம். ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோவில்களில் உள்ள ஈசன்களும் அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்கிறார்.

 

திருவிழா: 

வைகாசியில் திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, சிவராத்திரி, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு மாதங்கீஸ்வரர் கோயில்,

திருநாங்கூர்,

நாகப்பட்டினம் -609 106.

 

போன்:    

+91- 4364 – 256 044, 94436 – 78793.

 

அமைவிடம்:

மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம். அருகில் திருவாலி திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு திருக்கோவில்கள் உள்ளன.

Share this:

Write a Reply or Comment

sixteen − three =