May 06 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காலடி

  1. அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     காலடியப்பன் ( ஸ்ரீ கண்ணன்)

தல விருட்சம்   :     பவளமல்லி

தீர்த்தம்         :     பூர்ணாநதி

புராண பெயர்    :     சசலம்

ஊர்            :     காலடி

மாவட்டம்       :     எர்ணாகுளம்

மாநிலம்        :     கேரளா

 

ஸ்தல வரலாறு:

மூன்று வயதிலேயே தந்தையை இழந்த சங்கரர், தாய் ஆரியாம்பாள் அன்பிலேயே வளர்ந்து வந்தார். தாயிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர், சிறு வயதிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். அவரது தாய் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய போது, திரு மணம் செய்ய மறுத்துத் துறவு மேற்கொள்ளப் போவதாகச் சொன்னார். ஆனால், அவரது தாய் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஒருநாள், ஆதிசங்கரர் தன் தாயுடன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது, ஆற்றில் இருந்த முதலை அவரது காலை கவ்வி இழுத்தது. மகனின் நிலையைக் கண்ட தாய், கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தும் சங்கரரை காப்பாற்ற முடியவில்லை. உடனே சங்கரர் தன் தாயிடம், ‘அம்மா! என்னைத் துறவு செல்லத் தாங்கள் அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும். இல்லையேல் இது என்னை விழுங்கி விடும்’ என்றார். அதைக் கேட்டுப் பயந்து போன அவரது தாய், தன் மகன் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்துத் துறவு செல்ல அனுமதித்தார். என்ன ஆச்சரியம்.. முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது. அதன் பிறகு துறவு மேற்கொண்ட சங்கரர், தாயின் மேல் கொண்ட அன்பால், அடிக்கடி அவரை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார்.

சங்கரரின் தாய், சிறிது தொலைவிலிருக்கும் பெரியாறு ஆற்றில் தினமும் குளித்து, அங்கிருக்கும் கண்ணனை வழிபட்டு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வயதான காரணத்தால் அந்த வழக்கத்தை கடைப்பிடிப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை ஒரு முறை சங்கரரிடம் சொல்லி வருந்தினார். அதைக் கேட்ட சங்கரர், கண்ணனை நினைத்து வணங்கினார். அப்போது, ‘குழந்தையே! நீ காலடி எடுத்து வைக்கும் இடத்திற்குப் பெரியாறு தேடி வரும்’ என்று அசரீரி கேட்டது. அதனைக் கேட்ட சங்கரரும் தனது காலடியை எடுத்து வைக்க, பெரியாறு சங்கரரின் தாயிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதுவரை ‘சசலம்’ என்று அழைக்கப்பட்ட அந்தக் கிராமம், அதன் பிறகு ‘காலடி’ என்று பெயர் மாற்றம் பெற்றது. பெரியாற்றிலிருந்து பிரிந்து வந்த அந்த ஆறு ‘பூர்ணா ஆறு’ என்று அழைக்கப்படுகிறது. சங்கரர் தாயின் விருப்பத்திற்கேற்ப அவர் வழிபடுவதற்காக அங்கு கண்ணனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதில் கண்ணன் சிலையையும் நிறுவினார். ஆதிசங்கரர் நிறுவிய இந்தக் கோவில் தற்போது ‘திருக்காலடியப்பன் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • ஆலயத்தின் கருவறையில் திருக்காலடியப்பன் (கண்ணன்), வலது கையில் வெண்ணெய் வைத்தபடி, இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறார். மேலிருக்கும் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் உள்ளது.

 

  • இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் “அஞ்சனா’ எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும், இங்கும் மட்டுமே “அஞ்சனா’ கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  • கருவறைக்கு வலது புறம் சிவன், பார்வதி, கணபதி, கிருஷ்ணர் ஆகியோருக்கான சன்னிதிகளும், வழிபாட்டு மண்டபத்தில் பரசுராமர், ஆதிசங்கரர் ஆகியோரது சன்னிதிகளும் இருக்கின்றன.

 

  • சுற்றுப்பகுதியில் ஐயப்பனுக்குச் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது.

 

  • இக்கோவிலின் எதிரில் ஆரியாம்பாள் சமாதியும் இருக்கிறது.

 

  • கண்ணன் கோவில்களில் கண்ணனின் அருகில் சிவன், பார்வதி சன்னிதிகள் இருப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர் பக்தர்கள்.

 

  • இத்தலத்தை “கிருஷ்ணன் அம்பலம்’ என்றால் தான் தெரியும்.

 

  • கேரளாவில் உள்ள மிக முக்கியமான இந்துக்களின் புனித இடம் இந்த காலடி ஆகும் . ஏனெனில் அத்வைத தத்துவத்தை உலகுக்கு வழங்கிய ஆதி சங்கரர் அவதரித்த இடம் இந்த காலடி ஆகும்

 

  • இக்கோயிலானது சங்கரருடைய குலதெய்வம் ஆவார் . அவருடைய தாயார் தினமும் பூர்ணாநதியில் குளித்து இவ் கண்ணனை அவர் தினமும் வணங்குவார் . கி பி 795 இல் சங்கரர் இக்கோயிலை காட்டினார் .

 

  • சங்கரர் தன குருகுல வாசத்தின் போது ஏகாதசி விரதம் இருந்து மறு நாள் துவாதசி திதி அன்று பிட்சை எடுத்து உண்ண புறப்பட்டார் அப்போது அவர் அயாசகன் என்ற ஏழை வீட்டில் “பவதி  பிட்சாம் தேஹி” என்று பிட்சை கேட்டார் , ஆனால் அவரிடம் பிட்சை போட எதுவும் இல்லை ஆதலால் தன்னிடம் இருந்த காய்ந்த நெல்லிக்கனியை சங்கரருக்கு பிட்சை இட்டார் , இதை கண்டு மிகவும் மனம் வருந்திய சங்கரர், அந்த பெண்ணிற்கு உதவ நினைத்து  மனம் உருகி தயார் மஹாலக்ஷ்மியை நினைத்து  சுலோகம் பாடினார் , அவர் 19 ஸ்லோகம் பாடி முடித்தபோது தாயார் கருணையால் அந்த ஏழை பெண்ணின் வீட்டின் கூரையில் இருந்து தங்க நெல்லிக்கனியை மழையாக பொழிவித்தார் . அந்த ஸ்லோகமே கனகதாரா ஸ்லோகமாகும் .

 

 

திருவிழா: 

அட்சய திரிதியை, ஆண்டு தோறும் கண்ணன் பிரதிஷ்டை திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின்போது, தினமும் அபிஷேகம், கலசாபிஷேகம், நவதானிய பூஜை நடக்கும். திருவோணம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, மகரசங்கராந்தி ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகிறது

 

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்

காலடி, – 638 574.

எர்ணாகுளம் மாவட்டம்.

கேரளா மாநிலம்.

 

போன்:    

+91- 93888 62321.

 

அமைவிடம்:

கேரளாவில் எர்ணாகுளம் நகரில் இருந்து திருச்சூர் செல்லும் வழியில் 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அங்கமாலி சென்று, அங்கிருந்து தெற்கு நோக்கி 8 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்லலாம். இக்கோவிலுக்கு எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. அங்கமாலியில் இருந்து நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.

Share this:

Write a Reply or Comment

one × two =