கடிதம் – 39 – சொத்தும், சொத்தையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் தங்களுக்கு திருமணம் நல்லபடி உடனே நடக்க என்ன செய்ய வேண்டும்?

Vastu - Delay Marriage–    திருமணப் பெண் திருமணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.

–    திருமணப் பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் திருமணம் தள்ளி போய் கொண்டிருக்கும் பெண்ணின் திருமணம் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்.

1953 – ம் வருடம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ஒரு சாதாரண கூலிக் தொழிலாளியின் மகனாக பிறந்த திரு.ஹோவர்டு ஹீல்ட்ஸ், சாதாரணமாக துவக்கிய “ஸ்டார்பக்ஸ்” என்கின்ற அவருடைய காபி கடையை, 17,000 – க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட மிகப் பெரிய நிறுவனமாக மாற்றியதற்கான காரணமாக அவர் சொன்ன வார்த்தைகளை தான் நானும் திருமணம் தள்ளிப் போகும் பெண்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்:-

“நடைமுறை சாத்தியம் என்று பிறர் எதைக் கருதுகின்றனரோ, அதைவிட அதிகமாக கனவு காணுங்கள்.

“நடைமுறை சாத்தியம் என்று பிறர் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதைவிட அதிகமாக எதிர்பாருங்கள்.

தனக்கு யாருடன் திருமணம் நடக்க வேண்டும் என்பதை தீர்மானித்து அவனையே அடைந்த ஆண்டாளை இதற்கு முன்னுதாரணமாக எடுத்து கொள்ளலாம். காரணம் உறங்கா அரங்கனின் உயிர்த்துடிப்பான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பூமிக்கு மனுஷியாக வந்திருந்தாலும் அரங்கனை அடைவதையே தன் லட்சியமாகக் கொண்டு, அந்த லட்சியத்தை அடையும் தன்னம்பிக்கையையும் தன்னுள் வளர்த்து, திருப்பாவை முப்பதையும், நாச்சியார் திருமொழி நூற்றி நாற்பத்தி மூன்றையும் எழுதியதன் மூலம் தான் எப்படி வாழ வேண்டும் என கனவும் கண்டு, கண்ட கனவை காட்சியும்படுத்தி அரங்கனை கடைசியில் கைபிடித்தாள்.

ஆண்டாளை போல நினைத்தவரை கைபிடிக்க திருமணப்பேறு தள்ளிப் போய் கொண்டிருக்கின்ற பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்:-

  1. ஆண்டாள் போன்று தியான வாழ்வு மேற்கொள்ளுங்கள்.
  2. வருங்கால கணவரை அவர் வாழ்க்கை துணைவராக வரும் முன்னேரே கசிந்து உருகி காதலிக்கத் துவங்குங்கள்.
  3. உங்களை எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக வைத்துக் கொள்ளுங்கள்.
  4. நிறைய திருமண விழாவிற்கு சென்று திருமண ஜோடிகளை மனதார வாழ்த்துங்கள். (திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் எங்கே தன்னுடைய திருமணத்தை பற்றி அடுத்தவர்கள் கேட்டு விடுவார்களோ என்று பயந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு போவதை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவே அவர்களுடைய சொந்த திருமணத்தை தள்ளிப் போக வைக்கும் அளவிற்கு பெரிய காரணமாக மாறிவிடுகின்றது.)
  5. திருமணப் பரிகாரம் என்று யந்திரம் வாங்கி வைத்து கொள்வதாலோ, மண்சோறு சாப்பிடுவதாலோ, கலர், கலராக பரிகார மோதிரம் மாட்டிக் கொள்வதாலோ எந்தவித பிரயோஜனமும் இல்லை. இது போன்ற விஷயங்கள் மனரீதியாக நமக்கு மிகப்பெரிய பாதிப்பை மட்டுமே உண்டு பண்ணும்.
  6. திருமணம் இன்னும் இரண்டு நாட்களில் என்றால் நாம் எவ்வளவு தயார் நிலையில் இருப்போமோ அந்தளவு தயார் நிலையில் நாம் எப்போதும் இருக்க வேண்டும். மேலும் திருமணத் தடையை நினைத்தோ, வீட்டில் நிலவும் வேறு பிரச்சினைகளுக்காகவோ எக்காரணம் கொண்டும் அழவும் கூடாது; தன்னை தானே நொந்து கொள்ளவும் கூடாது.
  7. திருமண நடைபெறும் இடத்தை தீர்மானித்து கொள்ள வேண்டும். மணமகன் வீட்டார் இந்த இடம் வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்று நினைக்க கூடாது. அப்படி நினைப்பதும் தவறு. (உதாரணமாக கோவிலில் வைத்து திருமணம் என்றால் அதில் 100% உறுதியாக இருக்க வேண்டும்.)
  8. திருமணத்திற்கு தேவையானவற்றை பட்டியலிட வேண்டும்.
    1. நகை / உடை / பொருள் வாங்குதல் பற்றி
    2. பணம்
    3. உணவு
    4. அழைப்பிதழ்
    5. அழைக்கப்பட இருப்பவர்களின் பட்டியல்
    6. நாதஸ்வரம்
    7. வரவேற்பு மண்டபம்
    8. தங்க இட வசதி
    9. போக்குவரத்து வசதி
    10. திருமணத்தை நடத்த உதவி புரிபவர்களின் பட்டியல் மற்றும் அவர்கள் திருமணத்தில் கவனிக்க / செய்ய வேண்டிய விஷயங்கள்.
    11. திருமணம் முடிந்து (Last) போக விரும்புகின்ற தேனிலவு வாசஸ்தலம்
    12. திருமணத்தை பதிவு செய்யும் முறை
    13. தாம்பூலம் / வீடியோ / புகைப்படம்
    14. புரோகிதர்  Etc.,
  9. தினமும் இளையராஜா, M.S.V., போன்றோர் இசையில் வந்த மனதிற்கு இதமான நிறைய பாடல்களை கேளுங்கள். வாய்விட்டு சிரிக்கும் வகையில் இருக்கும் நிறைய நிகழ்ச்சிகளை பாருங்கள்.
  10. திருமணம் சீக்கிரம் நடைபெற திருமணஞ்சேரி, திருவிடந்தை போய் வருவதால் எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்களுக்காக நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.
  11. “ALL IS WELL” என்று சொல்லியவாறு எழுந்திருங்கள். ஒவ்வொரு நாளும் “ALL IS WELL” என்று நிறைய தடவை சொல்லுங்கள். வார்த்தைகள் சொல்லப்பட, சொல்லப்பட்ட எண்ணங்கள் உருவமாக மாற ஆரம்பித்து விடும். எண்ணம் அது தெளிவாக இருந்தால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் புது சொந்தம் நிரந்தர சொத்தாக கிடைக்கும் அதுவே உங்களது எண்ணம் சரியாக இல்லாது போனால் வாழ்க்கையே சொத்தையாகத் தான் மாறி போய் விடும்.

சொத்து வேண்டுமா அல்லது சொத்தை வேண்டுமா என்கின்ற முடிவு தற்போது உங்கள் கையில்?!

காணும் கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொண்டோம். தெரிந்து கொண்டதை எப்படி ABCD – யுடன் தொடர்பு படுத்த இருக்கின்றேன் என்பதை அடுத்த கடிதத்தில் பார்ப்போமா?!…

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. poosana nayanar polava?

    Reply

Write a Reply or Comment

one × 1 =