September 11 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாழம்பூர்

  1. அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     திரிசக்தி அம்மன்

ஊர்       :     தாழம்பூர்

மாவட்டம்  :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, ஜ்வாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய முப்பெருந்தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது.. அந்த பக்தர்களுள் ஒருவரின் கனவில், பட்டாடை உடுத்திய மூன்று சிறுமிகளும், கூடவே மூன்று நாகங்களும், சிம்மமும் அடிக்கடி தோன்றின. அந்த பக்தர் கனவுக்கான காரணம் தெரியாமல் திகைத்தார். தனக்கு அடிக்கடி வரும் இந்தக் கனவு குறித்து தனது  குருசாமியிடம் கூறினார். மூன்று  குழந்தைகளும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று சக்திகள். அவர்கள் உன் கனவில் தோன்ற ஏதேனும் காரணம் இருக்கும். நீ ஏதேனும் பிரார்த்தனை செய்து கொண்டு நிறைவேற்றாமல் இருக்கிறாயா? என்று கேட்டார் குருசுவாமி.

பிரார்த்தனை என்று ஏதுமில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று தேவியருக்கும் சேர்த்து ஒரு கோயில் கட்டும் திட்டம் இருந்தது, என்று பக்தர் பதிலளித்தார். உடனே அதை நிறைவேற்றும்படி கூறினார் குருசுவாமி. குருவின் வழிகாட்டுதலோடு ஆலயமெழுப்பிய பக்தர், ஞான சரஸ்வதி, மூகாம்பிகை, லட்சுமி ஆகியோரை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்.

 

கோயில் சிறப்புகள்:

  • மூன்று கருவறையில் மூன்று சக்திகள் தனித்தனியாக ஒரே கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு.

 

  • ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாய் வரவேற்கும் ஆலயத்திற்குள் நுழைந்தால், பிரகாரத்தில் பால கற்பக விநாயகர், பாலமுருகன், பைரவர், ஞான சரஸ்வதி, மூகாம்பிகை, லட்சுமி என்று தனித்தனியே அருள்பாலிக்கிறார்கள்.

 

  • ஒவ்வொரு கருவறைக்கு மேலும் தனித்தனி விமானங்கள். முதலில் ஞான சரஸ்வதி நான்கு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும், கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள். இடது கீழ் கரத்தில் ஓலைச்சுவடியும், வலது கீழ் கரத்தில் சின்முத்திரை காட்டி தரிசனம் தருகிறாள். இவளைப் பணிய, படிப்பாற்றலும், படைப்பாற்றலும் மேலோங்குகிறது.

 

  • இவளை அடுத்து கிரியா சக்தியாகத் திகழும் மூகாம்பிகை அமர்ந்துள்ளாள். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இவள், மேலிரு கரங்களில் சங்கு சக்கரமும், கீழ் வல இடக்கரங்கள் சின்முத்திரையும் வரதஹஸ்தமும் உள்ளது. மூகாம்பிகையின் அருள் பார்வை செயல் முடிக்கும் ஆற்றல்,மனவலிமையைத் தரும். அச்சத்தை போக்கும்.

 

  • அடுத்து இச்சா சக்தியாகிய லட்சுமி தேவி அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் தாமரை மொட்டுகளைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய-வரத ஹஸ்தம் காட்டி புன்னகை தவழ காட்சி அளிக்கிறாள். பாற்கடலில் பிறந்த பாவையான இவள், கடலைப் போன்றே வற்றாத வளம் தருபவள். அன்னையின் அருட்பார்வை செல்வமெல்லாம் தரும். வறுமையை விரட்டும். கல்வி இருக்கும் இடத்தில் தானாகவே வீரமும், செல்வமும் வந்து சேரும் என்பதை நிரூபிப்பதுபோல் இந்த மூன்று அன்னையரையும் தரிசிக்கலாம்.

 

திருவிழா: 

நவராத்திரி வழிபாடு

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில்

பழைய மகாபலிபுரம் ரோடு,

தாழம்பூர்-603 103,

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91 93810 1919

 

அமைவிடம்:

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், நாவலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் தாழம்பூர் கிராமத்தில் இத்தலம் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

nineteen − 5 =