July 16 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமணஞ்சேரி

  1. அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் வரலாறு

 

சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.

 

மூலவர்        :     உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர்

அம்மன்         :     கோகிலா

தல விருட்சம்   :     கருஊமத்தை

தீர்த்தம்         :     சப்தசாகரம்

புராண பெயர்    :     மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி

ஊர்             :     திருமணஞ்சேரி

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க தாராளமாக என்றார் ஈசன். ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார். இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார். தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபத்தினால் அக்காட்டில் அம்பிகை பசு உருவம் ஏற்றார். கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததார். பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார். ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார்.

 

சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிறங்கி மன்மதன் இத்தலத்தில் பேறு பெற்றன். இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம். ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தில் ஆமை பூஜித்து மனித உருப்பெற்றது. மன்மதன் ஆமை வழிபட்ட தலம். இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருவேள்விக்குடி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணத்திற்கான வேள்விகள், யாகம் மற்றும் இதர கல்யாண பணிகள் நடைபெற்றன.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 25 வது தேவாரத்தலம் திருமணஞ்சேரி. புராணபெயர் மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி. மூலவர் உத்வாக நாதசுவாமி, அருள்வள்ளல் நாயகர், கல்யாண சுந்தரேஸ்வரர். இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • அம்பாள் யாழினும் மென்மொழியம்மை, கோகிலாம்பாள். சிவனும் பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார்.

 

  • ஏழு கடல்களும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்தது அதுவே சப்த சாகரதீர்த்தம் என பெயர் பெற்று தல தீர்த்தமாக இருக்கின்றது.

 

  • கிழக்கு நோக்கியிருக்கும் இக்கோவில் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கொடிமர கணபதி காட்சி தருகிறார். அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

 

  • கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் முன் மண்டபத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள்.

 

  • கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மற்றும் நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, ராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்ணு சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றனர்.

 

  • இங்கு நவகிரகங்கள் கிடையாது.

 

  • சோழ மன்னன் கண்டராதித்யனின் மனைவியான செம்பியன் மகாதேவியால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது என்று இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.

 

  • சோழர் காலத்துக் கல்வெட்டுகள் 28 படி எடுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

 

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

 

  • சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.

 

  • சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.

 

  • தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன.

 

  • திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.

 

திருவிழா: 

சித்திரை மாதம்- திருக்கல்யாண உற்சவம் -வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசன் திருக்கல்யாண மகோற்சவம் மூன்று தினங்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1.30 மணி வரை,

மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்,

திருமணஞ்சேரி-609 801,

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91 – 4364 – 235 002

 

அமைவிடம்:

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியிலுள்ள குத்தாலம் சென்று அங்கிருந்து திருமணஞ்சேரி செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 29 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ..,

Share this:

Write a Reply or Comment

eighteen − 3 =