November 11 2021 0Comment

மழை சிறகுகள் 13

மழை சிறகுகள் 13

மழையை ரசிப்பது
ஆனந்தம் என்றால்
மழையில் நனைவது
பேரானந்தம்
இந்தப் பெரிய உண்மை
எத்தனை பேருக்கு வாழ்க்கையில் புரிந்திருக்கும் என எனக்கு தெரியாது
ஆனால் இன்று காலையில் சென்னை ராணி மெய்யம்மை திருமண மண்டபத்திற்கு வெளியே
பேரிரைச்சலுடன் பெரும் மழை பெய்தபோது
துளி பயமில்லாமல்
மழையை என் கைக்குள்
அடக்கிய தீருவேன்
என்று தாத்தாவின் மார்பிலே சாய்ந்தவாறு ஒரு வாலைச் சாமி செல்ல அடம் பிடித்தபோது
அதிர்ந்து தான் நான் போனேன்
அதன் அசாத்திய தன்னம்பிக்கையை கண்டு
சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு நன்றாக சாமியை உற்று நோக்கிய போது
நெப்போலியனுக்கு வாட்டர்லூ
என்பதைப் படித்து தெரிந்து வைத்திருக்கும் போல இந்த மழை
ஆழி மழை ஊரை அழிக்கலாம்
ஆனால்
ஊரையே உருவாக்குவளிடம்
பயந்து சரணடைவது ஒன்றே வழி என்பதை புரிந்துகொண்டு
வாலை சாமியிடம் வாலாட்டாமல்
தோல்வியை ஒப்புக்கொண்டு அதன் கைக்குள்
சிறை சென்ற பொழுது
ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று விட்டேன்
மழையை தன் புல் விரலுக்குள்
அடக்க ஆசைப்படும் அடக்க வல்லமை கொண்ட இதுபோன்ற குழந்தைகளைத்தான்
பிற்பாடு கால ஒட்டத்தில் மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்று இந்த சமுதாயம் குறுகி சிந்தித்து குறுக்கி விடுகின்றது
குழந்தையை அதன் குழந்தை வயதில் சாமியாக கும்பிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை
மறுத்து குழந்தையை
குழந்தையாகவும் நடத்தாமல் சாமியாகவும் நடத்தாமல்
ஆசாமிகளின் ஆசைக்கேற்ப
அதையும் மாற்றி
ஆசாமியாக நடத்தும்போதும்
நடத்த முற்படும் போதும்
தான் விளையாட்டு திசைமாறி
எதற்காக இந்த பிறப்பு என்று
அந்த குழந்தைக்கு அதன் கடைசி மூச்சு வரை தெரியாமலேயே அது உரு மாறி
ஆச்சரியக்குறியாக வர வேண்டியது கேள்விக்குறியாக மாறிவிடுகின்றது
பிறருக்கு ஒளி விளக்காக இருக்க வேண்டியது
வெறும் ஒலி விளக்கமாகவே இருந்துவிட்டு வெறுமனே இருந்துவிட்டு
இடம் பெயர்ந்து விடுகின்றது
இங்கிருந்து எங்கோ
காக்கையும் குருவியும்
தவளையும் முதலையும்
பல்லியும் பாம்பும் கூட
தாங்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக இந்த பூமியில்
பிறருக்கு பயனளிக்கும் வகையில்
வாழும் போதும் வாழ்ந்து விட்டு செல்லும் போதும்
ஏதோ ஒன்றை விட்டுச் செல்லும்போது
குழந்தைகளை மட்டும்
ஏன் அதன் வாழ்க்கையை வாழ அனுமதி மறுக்கின்றோம்
அடக்க முற்படுவதாலேயே
அதிக நேரங்களில் அவைகள் அத்துமீறுகின்றன
மடக்க நினைப்பதாலேயே
பல நேரங்களில்
மடை மாறுகின்றது
குழந்தைகளை குழந்தையாக
வளர்க்க வளர்த்தெடுக்க
முதலில் மழையை எதிர்க்க குடை கொடுப்பதை தடை செய்யுங்கள்
தடையால் குழந்தை குழந்தையாக இருக்கும்
அதன்பிறப்புக்கும் அதன் வாழ்க்கையிலேயே ஒரு சரியான விடை கிடைக்கும்
ஒரு சாதாரண மழை என்று நீங்கள் அலட்சியப்படுத்தினால்
நாளை நிச்சயமாக உங்கள் குழந்தையும் உங்களை அலட்சியப்படுத்தும்
குழந்தைகள் பிற்காலத்தில் சிங்கமாக இருக்க வேண்டும் என்று கூட நான் சொல்ல வரவில்லை
உங்கள் தடையால் பிற்காலத்தில் அது பிறரால் அசிங்கமாக பார்க்கப் பட்டுவிட கூடாது என்பதை தான் நான் சொல்ல விரும்புகின்றேன்
குழந்தைகளே
இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால்
தடை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால்
இனி அதை நொறுங்க நொறுங்க உடை
மழை உனக்கானது
உனக்கே உனக்கானது
உன் வாழ்க்கையை நீ வாழ்
எவருக்காகவும் எவர் வாழ்க்கையையும் நீ வாழ முற்படாதே.
வானம் வசப்படும் என்பது தவறு
நீயே வானம் என்பதே சரி
காலம் உணர்த்தும்.
என்றும் அன்புடன்
Drஆண்டாள் P சொக்கலிங்கம்
May be an image of 1 person, standing and road
Share this:

Write a Reply or Comment

eighteen − 5 =