October 10 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பைஞ்ஞீலி

  1. அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர்

அம்மன்         :     விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி

தல விருட்சம்   :     கல்வாழை

தீர்த்தம்         :     7 தீர்த்தங்கள், அப்பர் தீர்த்தம்

புராண பெயர்    :     வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடி

ஊர்             :     திருப்பைஞ்ஞீலி

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்தனர். அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்க எழுந்தருளினாள். அவள் சப்த கன்னிகளிடம்,””நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்டகாலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்,”என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கினர். பிற்காலத்தில் வாழை வனத்தின் மத்தியில் அம்பாள் இருந்த இடத்தில் சிவனும் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளினார்.

ஞீலிவனேஸ்வரர் ஆலயம் முதலில் ஒரு முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது. இந்த இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகிறது.

இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

 

கோயில் சிறப்புகள்:

  • ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது.

 

  • இத்திருக்கோயில் இறைவன் ஞீலிவனநாதர் என்றழைக்கப்படுகிறார். மற்ற சிவத்தலங்களை இறைவனைத் தரிசிக்க நாம் படிக்கட்டுகளில் மேலே ஏறிச் சென்று வழிபடும் நிலை இருக்கும். ஆனால் இத்திருக்கோயிலில் அதற்கு எதிர்மாறாக, படிக்கட்டுகளிலிருந்து கீழே இறங்கிச் சென்று தரிசிக்க வேண்டும்.

 

  • கருவறை சன்னதியை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் வசிஷ்ட முனிவருக்கு சிவபெருமான் நடனக் காட்சியருளிய இடம் இருக்கிறது. அதனாலேயே இக்கோயில் ரத்தினசபை எனப்படும் மேலைச் சிதம்பரம் என்றழைக்கப்படுகிறது.

 

  • சுயம்பு வடிவத்தில் ஞீலிவனேசுவரர் காட்சியளிக்கிறார். மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அதாவது இக்கோயிலில் அம்மன் சன்னதி இரண்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். இதில் நீள்நெடுங்கண் நாயகி சன்னதியில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 

  • இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சந்நிதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும்.

 

  • எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

  • மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்கினி பகவான், இராமர், அர்ச்சுணன், வஷிஷ்ட முனிவர் ஆகிய பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

 

  • திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞிலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இது பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

 

  • திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்சீலி ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் இறைவன் காத்துக் கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி வற்புறத்தினார். அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். அந்தணரை நீர் எங்கு செல்கிறீர் என்ரு அப்பர் கேட்டதற்கு தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூற இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி ஆலயம் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்துவிட்டார். அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.

 

  • திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும்.

 

  • ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.

 

  • திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலம். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “மானைப் போல் மைஞ்ஞீல வாள்கண் மலராள் மருவு திருப் பைஞ்ஞீலி மேவும் பரம்பரமே” என்று போற்றி உள்ளார்.

 

  • பங்குனி, புரட்டாசி மாதங்களின் 6,7,8-ஆவது நாள்களில் சூரிய பூஜை பெருவிழா நடைபெறுகிறது. கோயிலிலுள்ள சூரிய பெருமானுக்கு இந்த நாள்களில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சூரிய ஒளி இறைவன் மீது படும் வகையில் கோயில் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூஜைகள் இன்றளவும் உபயதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன.

 

  • கி.பி.6-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் ராஜாதிராஜ சோழன், சுந்தரபாண்டியன், மகேந்திர பல்லவ வர்மன் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்திருக்கின்றனர்.

 

திருவிழா: 

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், அப்பர் குரு பூஜை, தைப்பூசத்தில் எமனுக்கு சிறப்பு பூஜை.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்,

திருப்பைஞ்ஞீலி – 621 005.

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91- 431 – 2902654, 2560011, 9790107474

 

அமைவிடம்:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

1 + 2 =