January 03 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காரமடை

  1. அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நஞ்சுண்டேஸ்வரர்

உற்சவர்        :     பிரதோஷ நாயனார்

அம்மன்         :     லோகநாயகி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     தெப்பம்

ஊர்            :     காரமடை

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு:

அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மத்தாக பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் விஷத்தை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

சிவன் தேவர்களைக் காக்க, விஷத்தை விழுங்கினார். அப்போது அம்பிகை, அவரது கழுத்தைப் பிடித்து விஷம் உடலுக்குள் செல்லாமல் நிறுத்தினாள். விஷயம் கழுத்திலேயே தங்கியது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை உண்டவர் என்பதால் இவர், “நஞ்சுண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். திருநீலகண்டன் என்றும் இவருக்கு பெயர் உண்டு.

 

மைசூரில் உள்ள நஞ்சன்கூடு தலத்தை மாதிரியாகக் கொண்டு, இந்தக் கோயிலை அமைத்ததாகச் சொல்வர். கர்நாடகாவில் நஞ்சன்கூடில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குவது. நஞ்சுண்டேஸ்வரர், கோயில். அதே பெயரில் தமிழ்நாட்டில் காரமடையிலும் ஓர் கோயில் உள்ளது.  நஞ்சுண்டேஸ்வரர் கோவை காரமடைக்கு வந்தது எப்படி? ஒரு காலத்தில் நஞ்சன்கூடில் வாழ்ந்த ஒரு பிரிவினர், சூழ்நிலை காரணமாக அங்கிருந்து காரமடைக்கு இடம் பெயர்ந்தனர். தாங்கள் வணங்கி வந்த நஞ்சுண்டேஸ்வரரை, தாங்கள் இடம் பெயர்ந்த இடத்திலும் வணங்க வேண்டும். என்ற ஆவலில் அவருக்கு காரமடையில் கோயில் அமைத்தனர்.  ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான இந்த கோயில் வீரநஞ்சராயர் என்பவரால் கட்டப்பட்டது. காரமடையின் மையப்பகுதியில் ரங்கநாதர் கோயில் அருகிலேயே இந்த கோயில் உள்ளது. கோயிலின் முன்பு உயர்ந்த தீபத்தூண் காணப்படுகிறது. கருவறையும் அர்த்த மண்டபமும் பழமையானவை. அர்த்த மண்டபத்தில் ஒருபுறம் விநாயகரும் முருகனும் இருக்க, அவர்களுக்கு முன்னே நந்தி உள்ளார். கருவறையில் ஆலகால விஷத்தை உண்டு உயிர்களைக் காப்பாற்றிய நஞ்சுண்டேஸ்வரர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், பிற தலங்களைப்போல இல்லாமல் சற்று பட்டையாக இருக்கிறது. இந்த லிங்கம் செந்நிறமாக காட்சியளிப்பது மற்றொரு விசேஷம். இவருக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பை காண்பது அரிது.

 

  • மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, சிவன் சன்னதியைச் சுற்றிலும் கோஷ்டத்தில் 8 யானைகள் சுவாமி விமானத்தை தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு யானை சிற்பத்திற்கு கீழ் பிரம்மாவும், மற்றொரு யானைக்கு கீழே லட்சுமி நாராயணரும் காட்சி தருவது விசேஷம்.

 

  • சிவன், பாற்கடல் விஷத்தை ஒரு பிரதோஷ வேளையில் அருந்தினார். எனவே பிரதோஷ நேரத்தில் இங்கு சிவனுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

 

  • இன்னுமொரு முக்கிய விஷேசம், பிரதோஷ காலங்களில் சிவனுக்கு அமுது ( வெறும் சாதம் சிறிதளவு நெய் கலந்து) திருமேனியில் சார்த்தபடுகிறது.. பின்னர் அந்த அமுதை எடுக்கும்போது லிங்கத்தின் கழுத்தருகே சிறிய அளவில் பச்சை நிறமாக அமுது காட்சி தருகிறது (நஞ்சை உண்ட சிவனின் கழுத்தில் ஆலகால விஷம் தங்கி உள்ளதாக ஐதீகம்).. இத்தனைக்கும் அமுது படைக்கும் முன்பு சிவலிங்கம் நன்கு தேய்த்துக் கழுவப் படுகிறது.

 

  • முகலாயர் காலத்தில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட போது, நஞ்சன்கூடு (மைசூரு) நஞ்சுண்டேஸ்வரர்  கோவிலிலிருந்து எடுத்து வரப்பட்ட கல்லைக் கொண்டு இங்கு கோவில் அமைக்கப்பட்டது. எனவே அந்த கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம் .

 

  • அம்பிகை, லோக நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். சிவனின் உடலில் விஷம் இறங்காமல் செய்து, மக்களைக் காப்பாற்றியதால் இவள் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். இரண்டு கரங்களில் தாமரையுடன் காட்சி தரும் இவளது சிற்பம் திருவாட்சியுடன் சேர்த்து வடிக்கப்பட்டிருக்கிறது.

 

  • சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்த தலம் இது.

 

  • சிவன், அம்பிகைக்கு நடுவில் ஆறுமுக வேலவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இம்மூவரது சன்னதியும் ஒரே வரிசையில் அமைந்திருக்கிறது. 12 கரங்களுடன் காட்சி தரும் முருகனுடன் வள்ளி, தெய்வானையும் உள்ளனர்.

 

  • சிவனுக்கு இடதுபுறத்தில் ரங்கநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார். இவ்விருவருக்குமான தீர்த்தம் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது. மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜையின்போது தினமும் நஞ்சுண்டேஸ்வரர், ரங்கநாதர் கோயில் அர்ச்சகர்கள் இருவரும் ஒன்றாக சென்று தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கிறார்கள்.

 

  • நவராத்திரி விழாவின் பத்தாம் நாளில் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இக்கோயிலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சிக்கு சிவனை அழைத்துச் செல்வது விசேஷம். அப்போது சிவன், பெருமாள் இருவரும் அருகருகில் செல்கின்றனர். அந்நேரத்தில் மட்டுமே இவ்விருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

 

  • இத்தலத்து விநாயகர், “செண்பக விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். சிவன் சன்னதியை சுற்றி வரும்போது கோஷ்டத்தின் அடியில் பாதாள விநாயகர் இருக்கிறார். மிகவும் சிறிய மூர்த்தியான இவரை வணங்கிவிட்டே பரிவார தேவதைகளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

 

  • கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் தனித்து காட்சி தருகிறார்.

 

  • கோஷ்டத்தில் பிரதோஷமூர்த்தி, சிவதுர்க்கையும் இருக்கிறாள். துர்க்கைக்கு அருகில் சிவலிங்கத்தை ராகு, கேது வழிபடும் சிற்பம் இருக்கிறது. நவக்கிரக சன்னதி கிடையாது. கால பைரவர், சூரியன் உள்ளனர்.

 

  • மைசூரில் உள்ள நஞ்சன்கூடு தலத்தை மாதிரியாகக் கொண்டு, இந்தக் கோயிலை அமைத்ததாகச் சொல்வர்.

 

திருவிழா: 

சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்,

காரமடை 641 104.

கோயம்புத்தூர் மாவட்டம்.

 

போன்:    

+91 4254 272 318, 273 018, 94420 16192.

 

அமைவிடம்:

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் 30 கி.மீ., தூரத்தில் காரமடை உள்ளது. பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் கோயில் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

two × 2 =