April 24 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வரகூர்

  1. அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     லட்சுமிநாராயணர்

உற்சவர்   :     வெங்கடேசப்பெருமாள்

தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி

ஊர்       :     வரகூர்

மாவட்டம்  :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார். இல்லறத்தை விட்டார். துறவறம் மேற்கொண்டார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். அங்கே, திருப்பதி தலத்தில், ‘திருவையாறுக்கு அருகில் பூபதிராஜபுரத்துக்குச் செல்வாயாக. உன் வயிற்று வலி தீரும்’ என அசரீரி கேட்டது. இதன் பின்னர், நடுக்காவிரி எனும் பகுதியை அடைந்தார். இனி எந்தப் பக்கம் செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என அங்கே மரத்தடியில் இளைப்பாறினார்.

சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்னர், ஒரு அசரீரி கேட்டது. ‘விடியும்போது வெண்பன்றி ஒன்று உனக்கு முன்னே வரும். வழிகாட்டும்’ என கேட்டது. அதன்படி மறுநாள். விடிந்தது. வெண்பன்றி வந்தது. அந்தப் பன்றி செல்லும் வழியில், பன்றியைப் பின் தொடர்ந்து பயணித்தார் நாராயண தீர்த்தர். ஒவ்வொரு கிராமமாகக் கடந்து வந்து, ஓரிடத்தில் பெருமாள் கோயிலுக்குள் சென்றது. அவரும் சென்றார். அங்கே அந்த வெண்பன்றி, சந்நிதிக்குள் சென்றது. மறைந்தது. அங்கே பெருமாள் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினார். நாராயண தீர்த்தரின் வயிற்று வலி காணாமல் போனது சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர், அங்கேயே, அந்தத் தலத்திலேயே தங்கினார். கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான ‘ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் இசையும் நாட்டியமும் கலந்த நாடகத்தை அரங்கேற்றினார்

 

கோயில் சிறப்புகள்:

  • மகாவிஷ்ணு, தாமாகத்தோன்றி அருள்புரிந்த தலங்கள் சுயம்வியக்த சேத்ரம் எனப்படும். அவ்வகையில் மகாவிஷ்ணு இங்கு லட்சுமி நாராயணராக எழுந்தருளினார்.

 

  • ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. அதாவது நாராயண தீர்த்தர் எனும் அடியவர், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். அப்போது இந்த ஊருக்கு வரும் போது அவருக்கு வழி தெரியவில்லை. அந்த சமயத்தில், பெருமாள், வெண்பன் றியாக வந்து வழிகாட்டியதுடன் தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டியருளினார். வராகம் என்றால் பன்றி. இதையடுத்து இந்த ஊர், வராகூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் வரகூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

 

  • மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக்கொண்டு, காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள்,  ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார்.

 

  • துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு முதலான மூலிகைகளைக் கொண்டு இடித்துச் செய்த பொடியானது, பெருமாளின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மூலிகை பொடி பிரசாதமானது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்

 

  • லட்சுமி நாராயணர், வராகமூர்த்தி, கண்ணன் என மூன்று கோலங்களில் பெருமாள் இத்தலத்தில் அருள்புரிகிறார்.

 

  • ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம் வரகூர்.

 

  • வரகூர் எனும் அற்புதமான திருத்தலத்தில், கிருஷ்ண ஜயந்தியின் போது, இன்றைக்கும் கோலாகலமாக நடைபெறுகிறது உறியடி உத்ஸவம். அப்போது பத்துநாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உத்ஸவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார்.

 

  • நாராயண தீர்த்தருக்கு சுவாமி, கிருஷ்ணராகக் காட்சி தந்ததால் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இங்கு கிருஷ்ணருக்கென சிலை வடிவம் எதுவும் கிடையாது. லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகிறார்கள்.கோகுலாஷ்டமியன்று சுவாமி மடியில் குழந்தை கிருஷ்ணரை வைத்து, பெருமாளையே யசோதையாக அலங்கரிப்பர்.

 

  • மூலஸ்தானத்தில் லட்சுமி நாராயணர், பத்ம விமானத்தின் கீழ், இடது மடியில் மகாலட்சுமியை அமர்த்தி அமர்ந்திருக்கிறார். இவருக்கு தினமும் திருமஞ்சனம் உண்டு. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள உற்சவர் வெங்கடேசப்பெருமாள் பிரசித்தி பெற்றதால், இவரது பெயரால் கோயில் அழைக்கப்படுகிறது.

 

 

திருவிழா: 

கிருஷ்ண ஜெயந்தி

வரகூர் எனும் அற்புதமான திருத்தலத்தில், கிருஷ்ண ஜயந்தியின் போது, இன்றைக்கும் கோலாகலமாக நடைபெறுகிறது உறியடி உத்ஸவம். அப்போது பத்துநாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உத்ஸவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார். அருகில் உள்ள கடுங்கலாற்றங்கரையில் எழுந்தருள்வார். மூலவரின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள். அப்படி உறியடிக் கண்ணனாக பெருமாள் வீதியுலா வரும் வேளையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டே கோயிலை அடைவார்கள். சுற்றுவட்டார கிராம மக்களும் தஞ்சை, திருவையாறு, கண்டியூர் முதலான ஊர்களைச் சேர்ந்த மக்களும் வந்து விழாவில் கலந்துகொண்டு தரிசித்துச் செல்வார்கள்.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்,

வரகூர்-613 101

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91 90808 05403

 

அமைவிடம்:

தஞ்சாவூர் – திருவையாறு செல்லும் வழியில் (11 கி.மீ.,) திருக்கண்டியூர் சென்று, அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் 13 கி.மீ., சென்றால் வரகூர் தலத்தை அடையலாம். பஸ் ஸ்டாப்பில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.

Share this:

Write a Reply or Comment

nineteen − 2 =